தாட்கோ சார்பில், வங்கி தேர்வில் வெற்றிபெற ஆதிதிராவிடர், பழங்குடியின பட்டதாரி மாணவர்களுக்கு இலவச பயிற்சி:கலெக்டர் பழனி தகவல்


தாட்கோ சார்பில், வங்கி தேர்வில் வெற்றிபெற ஆதிதிராவிடர், பழங்குடியின பட்டதாரி மாணவர்களுக்கு இலவச பயிற்சி:கலெக்டர் பழனி தகவல்
x
தினத்தந்தி 23 Sep 2023 6:45 PM GMT (Updated: 23 Sep 2023 6:46 PM GMT)

தாட்கோ சார்பில் ஆதிதிராவிடர், பழங்குடியின பட்டதாரி மாணவர்கள் வங்கி தேர்வில் வெற்றி பெற இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது என்று விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.

விழுப்புரம்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வங்கி தேர்வு

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி மூலம் துணை மேலாளர் பணிக்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு bank.sbi/careers/current-openings என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் துணை மேலாளருக்கான 2 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் 21 வயது முதல் 35 வயது வரை உள்ள ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (பி.ஏ., பி.காம்., பி.எஸ்சி., பி.டெக்.) முடித்த அனைத்து ஆதிதிராவிடர், பழங்குடியின பட்டதாரி மாணவர்கள் வருகிற 27-ந்தேதிக்குள்(புதன்கிழமை) bank.sbi/careers/current-openings என்ற இணையதளத்தின் வழியாக விண்ணப்பிக்கலாம்.

இலவச பயிற்சி

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேர்வு நடைபெறும் முறை அனைத்தும் இணையதளம் வழியாக நடைபெறும். இப்பதவிக்கான தேர்வு முறையானது முதற்கட்டத்தேர்வு, முதன்மை, நேர்காணல் மற்றும் குழுப்பயிற்சிகள் என 3 நிலைகளில் நடைபெற உள்ளது. முதற்கட்ட தேர்வானது வருகிற நவம்பர் மாதத்திலும், முதன்மை தேர்வானது இந்த ஆண்டு டிசம்பர் மற்றும் 2024-ம் ஆண்டு ஜனவரியிலும், நேர்காணல் மற்றும் குழு பயிற்சிகளுக்கான அழைப்பு 2024-ம் ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரியிலும் நடைபெற உள்ளது. இப்பதவிக்கான ஆரம்பகால மாத ஊதியம் ரூ.41,960 ஆகும். ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் துணை மேலாளர் பதவிக்கான தேர்வில் வெற்றி பெற ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு Veranda RACE என்ற பயிற்சி நிலையத்தின் மூலம் இலவச பயிற்சியை வழங்க தாட்கோ நிறுவனமானது முடிவு செய்துள்ளது. எனவே விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இப்பயிற்சியை பெற www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இப்பயிற்சிக்கான கட்டணம் தாட்கோ மூலமாக ஏற்கப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story