விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னையில் விரைவில் ஆர்ப்பாட்டம் தொல்.திருமாவளவன் எம்.பி. பேட்டி

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னையில் விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தொல்.திருமாவளவன் எம்.பி. தெரிவித்தார்.
திருச்சியில் நேற்று இரவு நடந்த தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அதானியை விமர்சித்ததாலும், பங்குச்சந்தை ஊழல் குறித்து விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழுவை அமைக்க கோரிக்கை விடுத்ததாலும் ராகுல்காந்தியின் பதவியை பறிக்கும் ஒரு கேடான அரசியலை பா.ஜனதா அரசு செய்துள்ளது. ராகுல்காந்தியை தேர்தலிலேயே நிற்கவிடாமல் தடுத்து, எதிரியே இல்லை என்ற நிலையில் தேர்தல் களத்தை சந்திக்கின்ற மிகவும் இழிவான ஒரு அரசியலை பா.ஜனதா கையில் எடுத்துள்ளது. இதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னையில் எனது தலைமையில் விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். ராகுல்காந்தி எதற்கும் அஞ்சத்தேவையில்லை. அவருடைய போராட்டம் மேலும் முன்னோக்கி செல்லவேண்டும். மம்தா பானர்ஜி காங்கிரஸ் அல்லாத ஒரு கூட்டணியை உருவாக்க முயற்சித்தால், அது அவருக்கும் நல்லதல்ல. நாட்டுக்கும் நல்லதல்ல. பா.ஜனதாவுக்கு ஆதரவாக அமைந்துவிடும். மம்தா பானர்ஜி பாசிச சக்திகளை வீழ்த்த காங்கிரஸ் கட்சியோடு இணைந்து 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலை சந்திக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.






