என்எல்சி கையகப்படுத்திய நிலத்தில்பாதை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம் சேத்தியாத்தோப்பு அருகே பரபரப்பு


என்எல்சி கையகப்படுத்திய நிலத்தில்பாதை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம் சேத்தியாத்தோப்பு அருகே பரபரப்பு
x

சேத்தியாத்தோப்பு அருகே என்.எல்.சி. கையகப்படுத்திய நிலத்தில் பாதை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்

சேத்தியாத்தோப்பு,

நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனம் நிலக்கரி வெட்டி எடுப்பதற்காக புதிய சுரங்கம் அமைக்க முடிவு செய்துள்ளது. இதற்காக சுற்றியுள்ள கிராமங்களை கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு அப்பகுதி கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் கரிவெட்டி கிராமத்தில் ஏற்கனவே என்.எல்.சி. நிர்வாகத்தால் கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் பாதை அமைக்க நேற்று எந்திரங்களுடன் அதிகாரிகள் சென்றனர்.

கிராம மக்கள் போராட்டம்

இது பற்றி அறிந்ததும் கிராம மக்கள் ஒன்று திரண்டு, பாதை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்ததும் சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ரூபன்குமார் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது கிராம மக்கள், கையகப்படுத்திய நிலத்திற்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும். நிலம் கொடுத்தவர்களுக்கு வீட்டில் ஒருவருக்கு என்.எல்.சி.யில் வேலை வழங்க வேண்டும். அதுவரையில் இந்த பகுதியில் பணி செய்ய என்.எல்.சி. அதிகாரிகளை விட மாட்டோம் என்றனர். இதையடுத்து பாதை அமைக்காமலேயே என்.எல்.சி. அதிகாரிகள் சென்றனர். தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கிராம மக்களும் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏறபட்டது.


Next Story