25-ந் தேதி சென்னையில் இலங்கை துணை தூதரக அலுவலகம் முற்றுகை


25-ந் தேதி சென்னையில் இலங்கை துணை தூதரக அலுவலகம் முற்றுகை
x
தினத்தந்தி 21 Oct 2023 6:45 PM GMT (Updated: 21 Oct 2023 6:46 PM GMT)

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க கோரி 25-ந் தேதி சென்னையில் இலங்கை துணை தூதரக அலுவலகத்தை முற்றுகையிடப்போவதாக ராமேசுவரம் மீனவர்கள் அறிவித்துள்ளனர்

ராமநாதபுரம்

மீனவர்கள் கைது

ராமேசுவரம், மண்டபம் பகுதியில் இருந்து கடந்த 14-ந் தேதி மீன் பிடிக்க சென்ற 5 விசைப்படகு மற்றும் 27 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க வலியுறுத்தி கடந்த 16-ந் தேதி முதல் ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்களின் வேலை நிறுத்தம் 6-வது நாளை எட்டியுள்ளது. நேற்று 700-க்கும் அதிகமான விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

முற்றுகை போராட்டம்

இந்நிலையில் வருகின்ற 25-ந் தேதி சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரக அலுவலகம் முன்பு ராமேசுவரம் அனைத்து விசைப்படகு மீனவர்கள் சார்பாக முற்றுகை போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து ராமேசுவரம் விசைப்படகு மீனவ சங்க பிரதிநிதி சகாயம் கூறும்போது,

இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் 27 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தியும், இலங்கை கடற்படை பிரச்சினை இல்லாமல் மீனவர்கள் மீன் பிடிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்தியும் வருகின்ற 25-ந் தேதி சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரக அலுவலகம் முன்பு ராமேசுவரம் அனைத்து விசைப்படகு மீனவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மீனவர்கள் குடும்பத்தினர் சார்பாக முற்றுகை போராட்டம் நடத்த உள்ளோம்.

2 பஸ்களில்

அதற்காக 24-ந் தேதி ராமேசுவரத்தில் இருந்து 2 பஸ்களில் 100 மீனவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள் சென்னை செல்ல உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். இதனிடையே ராமேசுவரத்தில் நடந்து வரும் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் சிறிய விசைப்படகுகள் மட்டும் கலந்து கொள்ளாமல் நேற்று முதல் மீன் பிடிக்க சென்றன. 50 விசைப்படகுகள் நேற்று மீன் பிடிக்க கடலுக்கு சென்றன.


Next Story