வேகத்தடுப்பு கம்பி மீது ஸ்கூட்டர் மோதி தொழிலதிபர் பலி


வேகத்தடுப்பு கம்பி மீது  ஸ்கூட்டர் மோதி தொழிலதிபர் பலி
x
தினத்தந்தி 10 Jun 2022 3:56 PM GMT (Updated: 10 Jun 2022 3:59 PM GMT)

வேடசந்தூர் அருகே வேகத்தடுப்பு கம்பி மீது ஸ்கூட்டர் மோதி தொழிலதிபர் பலியானார்.

திண்டுக்கல்

ரியல் எஸ்டேட் தொழில்

கரூர் பவளபுரியை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 54). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். மேலும் ம.தி.மு.க.வில் இருந்து வந்தார். இவர், திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடந்த உறவினரின் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக கரூரில் இருந்து ஸ்கூட்டரில் புறப்பட்டார்.

கரூர்- திண்டுக்கல் 4 வழிச்சாலையில் அவர் வந்து கொண்டிருந்தார். வேடசந்தூர் அருகே காக்காத்தோப்பு பிரிவில் ஸ்கூட்டர் வந்தபோது சாலையின் குறுக்கே வைக்கப்பட்டிருந்த வேகத்தடுப்பு கம்பி (பேரிகாட்) மீது எதிர்பாராதவிதமாக ஸ்கூட்டர் மோதியது.

தொழிலதிபர் பலி

இதில் கீழே விழுந்த இளங்கோவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இளங்கோவன் பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்து வேடசந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இவருக்கு மீனாட்சி என்ற மனைவியும், பிரபாகரன் என்ற மகனும், சூர்யா என்ற மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்றபோது விபத்தில் சிக்கி தொழிலதிபர் பலியான சம்பவம் கரூர் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.


Next Story