கம்பத்தில்சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்


கம்பத்தில்சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 30 March 2023 6:45 PM GMT (Updated: 30 March 2023 6:45 PM GMT)

கம்பத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

தேனி

கம்பத்தின் மையப் பகுதியான வேலப்பர் கோவில் தெருவில் மருத்துவமனை, நகைக்கடை, ஜவுளிக்கடை, பலசரக்கு கடைகள் அதிகம் உள்ளன. இதனால் இப்பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் அதிக அளவில் இருக்கும். இந்நிலையில் எல்.எப். மெயின் ரோடு-வேலப்பர் கோவில் தெரு பிரிவில் உள்ள அரசமரம் பகுதியில் சாலையின் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்பு செய்து பழக்கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வந்தனர்.

இதுகுறித்து பொதுமக்கள், கம்பம் நகராட்சி அதிகாரியிடம் புகார் தெரிவித்து வந்தனர். அதன்பேரில், நகராட்சி அதிகாரிகள் அவ்வப்போது ஆக்கிரமிப்புகளை அகற்றி வந்தாலும், அதன்பின்னர் கடைக்காரர்கள் மீண்டும் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தடுக்கும் வகையில் நகராட்சி கட்டிட ஆய்வாளர் சலீம் தலைமையில் நகராட்சி பணியாளர்கள், கம்பம் தெற்கு போலீசார் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். மேலும் சாலையை ஆக்கிரமிப்பு செய்யாதவாறு இரும்பு கம்பிகள் ஊன்றி தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து நகராட்சி கட்டிட ஆய்வாளர் கூறியதாவது, கம்பம் அரசமரம் பகுதியில் ஆக்கிரமிப்பு குறித்து பொதுமக்கள் தொடர்ந்து புகார் கொடுத்து வந்தனர். அதன்பேரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யாதவாறு கம்பிகள் ஊன்றப்பட்டுள்ளன. மேலும் கம்பிகள் ஒன்றோடு ஒன்று இணைத்து வெல்டிங் வைக்கப்பட்டு தடுப்புகள் அமைக்கப்படுகின்றன. இந்த தடுப்புகளுக்கு உட்புறமாக சாலையோர கடைகள் வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.


Related Tags :
Next Story