மறைமலைநகர் அருகே சாலை தடுப்பு கம்பியில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி


மறைமலைநகர் அருகே சாலை தடுப்பு கம்பியில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
x

மறைமலைநகர் அருகே சாலை தடுப்பு கம்பியில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியானார். இந்த விபத்தில் உடன் சென்ற 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

செங்கல்பட்டு

தனியார் கம்பெனி ஊழியர்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியை சேர்ந்தவர் அஜித் குமார் (வயது 26). அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பர் செல்வகுமார் (26). இவர்கள் இருவரும் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த திருத்தேரி பிள்ளையார் கோவில் பகுதியில் தங்கி மகேந்திரா சிட்டி பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அஜித்குமார் அவரது நண்பர் செல்வகுமார் மற்றும் திருத்தேரி பகுதியை சேர்ந்த வினோத் குமார் (30), ஆகிய 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் மறைமலைநகரிலிருந்து சிங்கப்பெருமாள் கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது கீழக்கரணை அருகே செல்லும்போது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவே இருந்த தடுப்பு கம்பியில் மோதியது.

பலி

இதில் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலே அஜித்குமார் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். செல்வகுமார், வினோத்குமார் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். உடனே அந்த பகுதியை சேர்ந்த மக்கள் படுகாயமடைந்த 2 பேரையும் ஆம்புலன்ஸ் மூலம் சிசிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


Next Story