ஓ.என்.ஜி.சி. புதிதாக எண்ணெய் கிணறு அமைக்கும் முடிவை கைவிட வேண்டும


ஓ.என்.ஜி.சி. புதிதாக எண்ணெய் கிணறு அமைக்கும் முடிவை கைவிட வேண்டும
x
தினத்தந்தி 22 Oct 2023 6:45 PM GMT (Updated: 22 Oct 2023 6:47 PM GMT)

ஓ.என்.ஜி.சி. புதிதாக எண்ணெய் கிணறு அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தி உள்ளது.

தஞ்சாவூர்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டக்குழுகூட்டம் தஞ்சையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு நிர்வாகக்குழு உறுப்பினர் விஜயலெட்சுமி தலைமை தாங்கினார். தேசிய குழு உறுப்பினர் சிவபுண்ணியம் கலந்து கொண்டு பேசினார். மாவட்டசெயலாளர் முத்து உத்திராபதி அறிக்கை வாசித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-டெல்டா மாவட்டங்களில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் புதிதாக 10 எண்ணெய் கிணறுகள் தோண்டப்போவதாகவும், அதற்காக கருத்துக் கேட்பு கூட்டங்கள் நடத்தப்போவதாகவும் அறிவித்துள்ளதை வன்மையாக கண்டிப்பது. ஓ.என்.ஜி.சி. தனது முடிவை திரும்ப பெற வலியுறுத்துவது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களில் விவசாயத்தை அழிக்கும் விதமாக ஓ.என்.ஜி.சி. நிர்வாகம் செயல்படுவதை அனுமதிக்க முடியாது. டெல்டா மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தொடர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.. மாணவர்கள் உயர் கல்வி கற்க வங்கியில் வாங்கிய கல்விக்கடனை திருப்பிக் கட்ட இயலாதவர்களிடம் அக்கடனை வசூலிக்க வங்கி நிர்வாகமும், மத்திய அரசும் இணைந்து தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்து உள்ளதை கண்டிப்பதோடு, உடனடியாக இந்த ஒப்பந்தம் திரும்பப் பெற வலியுறுத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் சக்திவேல், பொருளாளர் பாலசுப்பிரமணியன், நிர்வாக குழு உறுப்பினர்கள் சந்திரகுமார், ராமச்சந்திரன், பாஸ்கர், சேவையா, திருநாவுக்கரசு, மாவட்ட குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story