வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு - பக்தர்கள் சாமி தரிசனம்


வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு  - பக்தர்கள் சாமி தரிசனம்
x

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சிவகங்கை

திருப்பத்தூர்,

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வைகுண்ட ஏகாதசி விழா

சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூர் சவுமியநாராயண பெருமாள் கோவில், காரைக்குடி அருகே அரியக்குடி திருவேங்கடமுடையான் கோவில் உள்ளிட்ட பல்வேறு பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது.

அரியக்குடி திருவேங்கடமுடையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோவில் திறக்கப்பட்டு காலை திருப்பள்ளி எழுச்சியுடன் சிறப்பு பூஜை நடைபெற்றது. அதன் பின்னர் காலை 5.15 மணிக்கு பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து ஸ்ரீதேவி, பூதேவியருடன் ரத்தின அங்கியில் எழுந்தருளி புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் நம்மாழ்வார் எதிர்சேவையுடன் காலை 5.50 மணிக்கு பரமபதம் என்று அழைக்கப்படும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பின்னர் காலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்களின் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை சிவகங்கை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பழனிக்குமார் அறிவுறுத்தலின் பேரில் கோவில் பரம்பரை அறங்காவலர் வெங்கடாச்சலம், கோவில் செயல் அலுவலர் பாலசரவணக்குமார் ஆகியோர் செய்திருந்தனர். மேலும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு காரைக்குடி பழைய, புதிய பஸ் நிலையம், தேவகோட்டை பஸ் நிலையத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

திருக்கோஷ்டியூர் கோவில்

திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூரில் சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்கு உட்பட்ட சவுமியநாராயண பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நடந்தது. முன்னதாக நேற்று காலை உற்சவர் பெருமாள் சயன அலங்காரத்திலும், இரவு 8 மணிக்கு அமர்ந்த நிலையில் ராஜ அலங்காரத்திலும் காட்சியளித்தார். தொடர்ந்து வேதவிண்ணப்பம் வாசித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் ராஜ அலங்காரத்தில் சவுமிய நாராயண பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் எழுந்தருளி இரவு 10 மணிக்கு பரமபத வாசல் என்று அழைக்கப்படும் சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ராணி மதுராந்தகிநாச்சியார் உத்தரவின் பேரில் மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் சேவற்கொடியான் செய்திருந்தனர்.

சொர்க்கவாசல் திறப்பு

தேவகோட்டை ரெங்கநாத பெருமாள் கோவிலில் காலை 4.30 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் இரவு 8 மணிக்கு கருட வாகனத்தில் பெருமாள் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. இதேபோல் சிவகங்கை சுந்தரராஜ பெருமாள் கோவிலில் காலை 5.30 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் சுந்தரராஜபெருமாள் எழுந்தருளி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story