உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு


உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
x

உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

திருச்சி

திருமொழி சேவித்தல்

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில், 108 வைணவ தலங்களில் 2-வது தலமாகவும், திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்றதும், திருப்பாணாழ்வார் அவதரித்த திருத்தலமாகவும் விளங்குகிறது. இக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 11-ந் தேதி தொடங்கியது.

அன்று முதல் தினமும் மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை மூலஸ்தானத்தில் திருமொழி சேவித்தலும், இரவு 8 மணி முதல் இரவு 8.30 மணி வரை திருவாராதனம், வெள்ளிச்சம்பா அமுது செய்தல், தீர்த்த கோஷ்டியும், இரவு 8.30 மணி முதல் இரவு 9 மணி வரை பொது ஜன சேவையும் நடைபெற்றது.

சொர்க்கவாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நேற்று மாலை நடைபெற்றது. இதையொட்டி மாலை 5 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து உற்சவ நாச்சியார் சிறப்பு அலங்காரத்தில் புறப்பட்டு பரமபத வாசல் நோக்கி வந்தார். மாலை 5.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

சொர்க்கவாசலை கடந்து சென்ற உற்சவ நாச்சியார் வழிநடை உபயங்கள் கண்டருளி, ஆழ்வார்-ஆச்சாரியார் மரியாதையாகி திருவாய்மொழி ஆஸ்தான மண்டபம் வந்து சேர்ந்தார். அப்போது சொர்க்கவாசல் முன்பு திரண்டு நின்ற பக்தர்கள் உற்சவ நாச்சியாரை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். தொடர்ந்து இரவு 9.45 மணி அளவில் வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானம் சென்றடைந்தார்.

சாற்று மறை விழா

இதனை தொடர்ந்து 19-ந் தேதி வரை திருவாய் மொழி திருநாட்கள் நடைபெறும். அன்றைய தினங்களில் மாலை 5 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி, மாலை 5.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படும். வருகிற 20-ந் தேதி தீர்த்தவாரி, திருமஞ்சனம், திருவாய் மொழி திருநாள் சாற்றுமறை நடைபெறும்.

21-ந் தேதியன்று இயற்பா சாற்று மறையுடன் விழா நிறைவு பெறுகிறது. அன்றைய தினம் மாலை 5 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இயற்பா தொடக்கமும், மாலை 5.15 மணி முதல் இரவு 7.45 மணி வரை இயற்பா பிரபந்தம் சேவித்தல், திருவாராதனம், வெள்ளிச்சம்பா அமுது செய்தலும் நடக்கிறது. இரவு 7.45 மணி முதல் 8.30 மணி வரை இயற்பா சாற்றுமறை திருத்துழாய் தீர்த்த வினியோகம் நடக்கிறது.


Next Story