பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு


வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.

நாகப்பட்டினம்

வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.

சவுந்தரராஜ பெருமாள் கோவில்

108 திவ்ய தேசங்களில் 19-வது தேசமாக விளங்குவது நாைக சவுந்தரராஜ பெருமாள் கோவில். இந்த கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த 11 நாட்களாக நடைபெற்று வருகிறது.

பகல் பத்து உற்சவத்தையொட்டி தினமும் பெருமாள் பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது.இதை தொடர்ந்து நேற்று முன்தினம் மோகினி அலங்காரத்தில் பெருமாள் புறப்பாடு நடந்தது.

சொர்க்கவாசல் திறப்பு

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் எனும் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி நேற்று காலை 4.30 மணிக்கு நடந்தது. முன்னதாக பெருமாளுக்கு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் சவுந்தரராஜ பெருமாள் பரமபதவாசல் எனும் சொர்க்கவாசல் வழியே வெளியே வந்தார். அப்போது, பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்று பக்திகோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் நவநீத கிருஷ்ணன்கோவில், வெளிப்பாளையம் வரதராஜ பெருமாள் கோவில், ஆபரணதாரி அனந்த நாராயண பெருமாள் கோவில், பாப்பாகோவில் கஸ்தூரி ரங்கநாத பெருமாள் கோவில், திருக்கண்ணங்குடி லோகநாதப் பெருமாள் கோவில், நாகூர் பிரசன்னா வெங்கடாஜலபதி கோவில் உள்ளிட்ட கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நடந்தது.

திருக்கண்ணபுரம்

திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதை முன்னிட்டு ஸ்ரீதேவி, பூதேவி, சவுரிராஜ பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து சப்பரத்தில் எழுந்தருளி கோவில் பிரகார உலா நடைபெற்றது.

வேதாரண்யம் நகா், தோப்புத்துறையில் அமைந்துள்ள அபிஷ்ட வரதராஜ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதை தொடர்ந்து நேற்று இரவு 7 மணி முதல் ராபத்து உற்சவம் தொடங்கியது. வருகிற 12-ந்தேதி கஜேந்திர மோட்சம் நிகழ்ச்சியும், 13-ந்தேதி விடையாற்றி உற்சவம் நடைபெற உள்ளது.

கீழ்வேளூர்

கீழ்வேளூர் அருகே உள்ள ஆவராணி அனந்த நாராயண பெருமாள் கோவிலில்சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. பின்னர் அனந்த நாராயண பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கோவிலில் உள்பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதே போல் திருக்கண்ணங்குடி தாமோதர நாராயண பெருமாள் கோவில், கீழ்வேளூர் பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தலைஞாயிறு

தலைஞாயிறை அடுத்த ஓரடியம்புலம் கரியமாணிக்க பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் கோவில் பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.வாய்மேட்டை அடுத்த பஞ்சநதிக்குளம் மேற்கில் உள்ளராமசாமி பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.


Next Story