தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 16 ஆயிரத்து 888 பஸ்கள் இயக்கம்


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 16 ஆயிரத்து 888 பஸ்கள் இயக்கம்
x

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் சொந்த ஊர் செல்வதற்கு வசதியாக 16 ஆயிரத்து 888 பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.

சென்னை,

தீபாவளி பண்டிகை வருகிற 24-ந் தேதி கொண்டாடப்படுகிறது. வேலைவாய்ப்பு, தொழில் காரணமாக சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் வசிப்போர் தீபாவளியை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதற்காக ரெயில் முன்பதிவு டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்று தீர்ந்து விட்டன.

சொந்த வாகனம் வைத்திருப்போர் கார் மூலம் செல்வார்கள். பெரும்பாலானவர்கள் அரசு மற்றும் ஆம்னி பஸ்சையே நம்பி உள்ளனர். இதனையடுத்து தீபாவளியையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது குறித்த ஆலோசனை கூட்டம், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தில் போக்குவரத்து துறை முதன்மைச் செயலாளர் கே.கோபால், கூடுதல் ஆணையர் மற்றும் மேலாண் இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் பத்திரிகையாளர்களுக்கு அமைச்சர் சிவசங்கர் அளித்த பேட்டி வருமாறு:-

16 ஆயிரத்து 888 பஸ்கள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருகிற 21-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை சென்னையில் இருந்து தினசரி இயக்கக்கூடிய 2,100 பஸ்களுடன், 4,218 சிறப்பு பஸ்கள் என 3 நாட்களுக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக, 10 ஆயிரத்து 518 பஸ்களும்;

மற்ற ஊர்களில் இருந்து இந்த 3 நாட்களுக்கு 6,370 சிறப்பு பஸ்கள் என மொத்தமாக 16 ஆயிரத்து 888 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர், பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு 24-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை தினசரி இயக்கக்கூடிய 2,100 பஸ்களுடன் 3,062 சிறப்பு பஸ்களும்; மற்ற முக்கிய ஊர்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 3,790 சிறப்பு பஸ்கள் என மொத்தமாக 13 ஆயிரத்து 152 பஸ்களும் இயக்கப்படுகின்றன.

எங்கிருந்து?

சென்னையில் இருந்து 21-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை பஸ் நிலையங்களில் இருந்து இயக்கப்படும் பஸ்களின் விவரம்:

மாதவரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து செங்குன்றம் வழியாக பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை மற்றும் திருப்பதி செல்லும் பஸ்கள்;

கே.கே. நகர் மாநகர் போக்குவரத்து கழக பஸ் நிலையத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் பஸ்கள்;

தாம்பரம் அறிஞர் அண்ணா பஸ் நிலையத்தில் (மெப்ஸ்) இருந்து திண்டிவனம் வழியாக கும்பகோணம், தஞ்சை செல்லும் பஸ்கள்;

தாம்பரம் ரெயில் நிலைய பஸ் நிறுத்தத்தில் இருந்து திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பஸ்கள்; போளூர், சேத்துப்பட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பஸ்கள்;

திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் செல்லும் பஸ்கள்; திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பஸ்கள்;

பூந்தமல்லி, கோயம்பேடு

பூந்தமல்லி பைபாஸ் மாநகராட்சி பஸ் நிறுத்தத்தில் இருந்து வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சீபுரம், செய்யாறு, ஓசூர் செல்லும் பஸ்கள்; திருத்தணி வழியாக திருப்பதி செல்லும் பஸ்கள்;

கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து மேற்குறிப்பிட்டுள்ள ஊர்களை தவிர, மற்ற ஊர்களான மயிலாடுதுறை, நாகை, வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, நெல்லை, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, ஊட்டி, ராமநாதபுரம், சேலம், கோவை மற்றும் பெங்களூருக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

வழித்தட மாற்றம்

அனைத்து இருக்கைகளும் பூர்த்தியான அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு பூந்தமல்லி, நசரத்பேட்டை, வெளிவட்டச்சாலை வழியாக வண்டலூர், ஊரப்பாக்கம் தற்காலிக பஸ் நிறுத்தத்திற்கு சென்று, தாம்பரம் மற்றும் பெருங்களத்தூரில் இருந்து பயணம் மேற்கொள்ள முன்புதிவு செய்த பயணிகளை ஏற்றிச்செல்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர், போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து திருப்போரூர்-செங்கல்பட்டு அல்லது ஸ்ரீபெரும்புதூர்-செங்கல்பட்டு வழியாக செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சென்னையில் இருந்து பஸ்கள் வெளியேறும் வரை நெரிசல் வராமல் போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள்.

முன்பதிவு

21-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை கோயம்பேடு பஸ் நிலையத்தில் 10 முன்பதிவு மையங்களிலும், தாம்பரம் மெப்சில் ஒரு மையத்திலும் என மொத்தம் 11 மையங்களில் முன்பதிவு செய்யப்படும். இணையதள வசதியான tnstc official app மற்றும் www.tnstc.in போன்ற இணையதளங்கள் மூலமாகவும் முன்பதிவு செய்துகொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

பயணிகளின் வசதிக்காக 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பஸ்களின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கு ஏதுவாக, 94450 14450, 94450 14436 ஆகிய செல்போன் எண்களை தொடர்பு கொள்ளலாம்.

ஆம்னி பஸ் புகார்

ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151, 044-24749002, 044-26280445, 044-26281611 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். கோயம்பேடு பஸ் நிலையத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படும். மேலும் பஸ் நிலையங்களில் 20 இடங்களில் தகவல் மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

சிறப்பு பஸ்கள் புறப்படும் பஸ் நிலையங்களுக்கு பயணிகள் செல்ல ஏதுவாக மாநகர் போக்குவரத்து கழகத்தின் சார்பில் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து இணைப்பு பஸ்கள் 24 மணி நேரமும் இயக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்..


Next Story