ஊட்டி காந்தல் விஸ்வநாதர் கோவிலில் தட்சிணாமூர்த்தி மடத்தில் கோவை மடாதிபதி பொறுப்பேற்க எதிர்ப்பு


ஊட்டி காந்தல் விஸ்வநாதர் கோவிலில் தட்சிணாமூர்த்தி மடத்தில் கோவை மடாதிபதி பொறுப்பேற்க எதிர்ப்பு
x
தினத்தந்தி 6 May 2023 1:30 AM GMT (Updated: 6 May 2023 1:30 AM GMT)

ஊட்டி காந்தல் விஸ்வநாதர் கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்தி மடத்தில் கோவை மடாதிபதி பொறுப்பேற்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

நீலகிரி

ஊட்டி

ஊட்டி காந்தல் விஸ்வநாதர் கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்தி மடத்தில் கோவை மடாதிபதி பொறுப்பேற்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

தட்சிணாமூர்த்தி மடம்

நீலகிரி மாவட்டம் ஊட்டி காந்தலில் பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சுமார், 5 ஏக்கர் நிலப்பரப்பில் துளசிமடம் எனப்படும் தட்சிணாமூர்த்தி மடம் அமைந்து உள்ளது. கடந்த, 2015-ம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை கோவிலை கையகப்படுத்த நடவடிக்கை எடுத்தது. இதனால் ஆத்திரமடைந்த பக்தர்கள் இந்த கோவிலை இந்து சமய அறநிலையத்துறை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இந்த நடவடிக்கை கைவிடப்பட்டது.

இதன்பின்னர் பேரூர் ஆதீனம் மடாதிபதி மருதாச்சல அடிகளார், தட்சிணாமூர்த்தி மடாதிபதியாக நியமிக்கப்பட்டார். இவரது நடவடிக்கையில் அதிருப்தி ஏற்பட்டதால், அவரை நீக்கி, மதுரை சொக்கலிங்க தம்பிரான் மடாதிபதி, நியமிக்கப்பட்டு பணிகளை கவனித்து வந்தார்.

ஐகோர்ட்டில் வழக்கு

இந்தநிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மடாதிபதி மருதாச்சல அடிகளார் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். 2017-ல் கோவை மடாதிபதி மருதாசல அடிகளார் கோவில் நிர்வாக பணிகளை கவனிக்கலாம் என்று அவருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. அந்த சமயத்தில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கோவை மடாதிபதி மருதாசல அடிகளார் பொறுப்பேற்க வரவில்லை. இதனால் கோர்ட்டு உத்தரவை நிறைவேற்றக்கோரி மீண்டும் மனு தாக்கல் செய்தார். இந்தநிலையில், கடந்த மாதம் 24-ந் தேதி கோவை மடாதிபதி மருதாசல அடிகளார் பொறுப்பேற்க இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க கோர்ட்டு உத்தரவிட்டது.

பக்தர்கள் எதிர்ப்பு

இதைத்தொடர்ந்து நேற்று இந்து சமய அறநிலையத்துறை துணை கமிஷனர் அஸ்வினி, உதவி கமிஷனர்கள் கருணாநிதி விமலா, மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் ஜெகநாதன், போலீஸ் சூப்பிரண்டுகள் யசோதா, விஜயலட்சுமி ஆகியோர் தலைமையிலான போலீஸ் மற்றும் வருவாய் துறையினர் உதவியுடன் கோவை பேரூர் ஆதீனம் பொறுப்பேற்க நேற்று காந்தல் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு வந்தார். அப்போது பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளே நுழைய விடாமல் தடுத்தனர்.

ஆனாலும் கோர்ட்டு உத்தரவை நிறைவேற்ற வேண்டும் என்பதால், போலீசார் பாதுகாப்புடன் மருதாசல அடிகளாரை கோவிலுக்கு அழைத்து சென்றனர். மேலும் கோவிலை சுற்றி 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர்.

இதன் பின்னர் அவர் காந்தல் காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்தி மடத்தின் மடாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்து மூலவர் மற்றும் சுற்றுக் கோவில் தெய்வங்களை வழிபட்டார்.


Next Story