குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு


குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு
x

திருச்செங்கோட்டில் குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு சங்கத்தினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

நாமக்கல்

கலெக்டரிடம் மனு

திருச்செங்கோடு மோட்டார் தொழில் முன்னேற்ற சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகம் வந்து குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரேயாசிங்கிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

திருச்செங்கோடு-சங்ககிரி சாலையில் புதிதாக டாஸ்மாக் கடை அமைப்பதற்கு, அதிகாரிகள் ஆய்வு செய்து உள்ளதாக தெரிகிறது. டாஸ்மாமக் கடை வர இருக்கும் இடம் பட்டறைமேடு. இங்கு அனைத்து தொழிலாளர்களுக்கும், குடியிருப்பு பகுதிக்கும் நடுப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த இடத்தில் டாஸ்மாக் கடை அமைத்தால், பெண்கள் வேலைக்கு சென்று வருவதற்கும், குழந்தைகள் பள்ளிக்கு சென்று வரவும், விளையாட முடியாமலும் பாதிக்கப்படுவார்கள்.

டாஸ்மாக் கடை வேண்டாம்

மேலும் சட்ட ஒழுங்கு பிரச்சினையும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் தொழில் செய்பவர்களும், தொழிலாளர்களும் மிகவும் பாதிக்கப்படுவர். எனவே மாவட்ட கலெக்டர் தலையிட்டு, புதிதாக அமைக்க உள்ள இடத்தில் டாஸ்மாக் கடை அமைவதை தடுத்து நிறுத்தி, தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதே கோரிக்கையை வலியுறுத்தி திருச்செங்கோடு வட்டார பழைய இரும்பு கடை உரிமையாளர்கள் சங்கம், லாரி பாடி பில்டர்ஸ் அசோசியேசன், ரிக் என்ஜினீயரிங் மற்றும் சர்வீஸ் சென்டர் அசோசியேசன், கண்ணாடி கடை உரிமையாளர்கள் சங்கம், ஆட்டோ மொபைல்ஸ் உரிமையாளர்கள் சங்கம், மோட்டார் வாகன மெக்கானிக்கல் உரிமையாளர்கள் சங்கம், ரிக் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினரும் தனித்தனியாக மனு அளித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story