தனியார் நிலத்தில் அகழி தோண்ட எதிர்ப்பு


தனியார் நிலத்தில் அகழி தோண்ட எதிர்ப்பு
x
தினத்தந்தி 16 Jun 2023 1:00 AM IST (Updated: 16 Jun 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர் அருகே தனியார் நிலத்தில் அகழி தோண்ட எதிர்ப்பு எழுந்தது. இது தொடர்பாக தாசில்தார், வனத்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

நீலகிரி

கூடலூர்

கூடலூர் அருகே தனியார் நிலத்தில் அகழி தோண்ட எதிர்ப்பு எழுந்தது. இது தொடர்பாக தாசில்தார், வனத்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அகழி தோண்டும் பணி

கூடலூர் தாலுகா பகுதியில் காட்டுயானைகள் அடிக்கடி ஊருக்குள் வருகிறது. அவை விவசாய பயிர்கள், வீடுகளை சேதப்படுத்துகிறது. குறிப்பாக கூடலூர் அருகே பாடந்தொரை சுற்றுவட்டார கிராமங்களுக்குள் தினமும் காட்டுயானை வந்து வாழைகளை சேதப்படுத்தி வருகிறது. மேலும் சிலர் காட்டு யானைகள் தாக்கி உயிரிழந்துள்ளனர்.

இதனால் காட்டுயானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து காட்டு யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ள வாச்சிக்கொல்லி பகுதியில் கடந்த சில நாட்களாக அகழி தோண்டும் பணி நடைபெற்று வருகிறது.

பேச்சுவார்த்தை

இந்த நிலையில் வனத்தின் கரையோரம் அமைக்காமல் தனியார் நிலத்துக்குள் அகழி தோண்டுவதாக பொதுமக்களில் ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது வனத்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் பலன் ஏற்படவில்லை.

இதுகுறித்து தகவல் அறிந்த தாசில்தார் சித்ராஜ் தலைமையிலான வருவாய்த்துறையினர் விரைந்து வந்து மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது வன நிலத்தின் எல்லையை வரையறை செய்ய வேண்டும். அதன் பின்னர் அகழி தோண்டும் பணி மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் அதுவரையில் தற்காலிகமாக பணியை நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டது. இதைத்தொடர்ந்து அகழி தோண்டும் பணி நிறுத்தப்பட்டது. இதை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

1 More update

Next Story