339 பேருக்கு பணி நியமன ஆணை

கிருஷ்ணகிரியில் நடந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 339 பேருக்கு பணி நியமன ஆணையை கலெக்டர் தீபக் ஜேக்கப் வழங்கினார்.
கிருஷ்ணகிரியில் நடந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 339 பேருக்கு பணி நியமன ஆணையை கலெக்டர் தீபக் ஜேக்கப் வழங்கினார்.
வேலைவாய்ப்பு முகாம்
கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லூரியில், தனியார் துறை வேலைவாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடந்தது. இதில், சென்னை, சேலம், கிருஷ்ணகிரி, ஓசூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 65 நிறுவனங்கள் பங்கேற்றன. இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க 1,365 பேர் பதிவு செய்தனர்.
இந்த முகாமை கலெக்டர் தீபக் ஜேக்கப் தொடங்கி வைத்தார். முகாமில் 339 பேர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு பணி நியமன ஆணையை கலெக்டர் வழங்கினார். இதில் கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பிரசன்ன பாலமுருகன், அரசு மகளிர் கலைகல்லூரி முதல்வர் கோவிந்தராசு, கட்டிக்கானப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரிதேவி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டனர்.
46 பேருக்கு சான்றிதழ்
பின்னர் கலெக்டர் பேசுகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 5 வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 468 பேர் நேரடி வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இன்றைய முகாமில் பலருக்கு வேலை கிடைத்துள்ளது. இதுபோன்ற முகாம்களை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ளவேண்டும். வேலை கிடைக்கவில்லை என சோர்ந்துவிடாமல், தொடர் முயற்சிகளை மேற்கொண்டால், திருப்தியான பணியுடன் வெற்றி கிடைக்கும் என்று கூறினார்.
தொடர்ந்து இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், தொழில் பயிற்சி நிறுவனம், வேலைவாப்புடன் கூடிய திறன் வளர்ப்பு பயிற்சி முடித்த 46 பேருக்கு பயிற்சி நிறைவு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.






