பழனி முருகன் கோவிலில் நாளை குடமுழுக்கு விழா - ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவ ஏற்பாடு


பழனி முருகன் கோவிலில் நாளை குடமுழுக்கு விழா - ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவ ஏற்பாடு
x

பெங்களூருவில் இருந்து தனியார் ஹெலிகாப்டர் பழனிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

திண்டுக்கல்,

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாவது படை வீடாக போற்றப்படும் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் 27-ந்தேதி(நாளை) குடமுழுக்கு நடத்தப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து தைப்பூசத் திருவிழாவும் நடைபெறுகிறது.

இதனை முன்னிட்டு தற்போது பழனியில் குடமுழுக்கு விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. குடமுழுக்கு விழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் வருகிற 27-ந்தேதி உள்ளூர் விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

குடமுழுக்கு விழா நாளை காலை 8 மணி முதல் 9 மணி வரை நடைபெற உள்ளது. குடமுழுக்கு விழாவின் போது தீபாராதனைக்குப் பிறகு ராஜகோபுரம் உள்பட கோவில் வளாகம் முழுவதும் ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பெங்களூருவில் இருந்து தனியார் ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டுள்ளது.

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவிலுக்குச் சொந்தமான கலை மற்றும் அறிவியல் பண்பாட்டுக் கல்லூரியின் மைதானத்தில் ஹெலிகாப்டர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த ஹெலிகாப்டருக்கு ஒரு இன்ஸ்பெக்டர், 20 காவலர்கள் என மொத்தம் 21 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



Next Story