பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் போலீஸ் அணிவகுப்பு ஒத்திகை

சுதந்திர தின விழாவையொட்டி பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் போலீஸ் அணிவகுப்பு ஒத்திகை நேற்று நடைபெற்றது.
சுதந்திர தின விழாவையொட்டி பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் போலீஸ் அணிவகுப்பு ஒத்திகை நேற்று நடைபெற்றது.
சுதந்திர தின விழா
இந்திய திருநாட்டின் 76-வது சுதந்திர தின விழா நாளை (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் சுதந்திர தின விழா நடைபெறுகிறது.
காலை 9.05 மணிக்கு கலெக்டர் கார்த்திகேயன் தேசிய கொடி ஏற்றி, போலீசார், தீயணைப்பு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார்.
இதை தொடர்ந்து சிறப்பாக பணிபுரிந்த போலீசாருக்கு பதக்கமும், அரசு துறை அலுவலர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.
அணிவகுப்பு ஒத்திகை
இறுதியாக மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இதையொட்டி போலீசார், தீயணைப்பு வீரர்கள் அணிவகுப்பு ஒத்திகை நடத்தி வருகிறார்கள்.
நேற்று வ.உ.சி. மைதானத்தில் போலீசார் துப்பாக்கியுடன் ஒத்திகை நிகழ்த்தினார்கள். தீயணைப்பு படை வீரர்களும் கலந்து கொண்டனர். திறந்த ஜீப்பில் கலெக்டர் வருவது போல் இந்த ஒத்திகை நடத்தி பார்த்தனர்.
3 அடுக்கு பாதுகாப்பு
இதையொட்டி பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானம் போலீஸ் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. அங்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போட்டப்பட்டு உள்ளது.
இதுதவிர நெல்லை மாவட்டம் முழுவதும் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவேஷ் குமார், சூப்பிரண்டு சிலம்பரசன், மாநகர துணை கமிஷனர்கள் சரவணகுமார், அனிதா ஆகியோர் மேற்பார்வையில் மாநகர பகுதியில் 1,000 போலீசார், புறநகர் பகுதியில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.






