புதுக்கோட்டை அருகே பயங்கரம்: பட்டாசு ஆலையில் வெடிவிபத்து; 5 பேர் படுகாயம்


புதுக்கோட்டை அருகே பயங்கரம்: பட்டாசு ஆலையில் வெடிவிபத்து; 5 பேர் படுகாயம்
x

புதுக்கோட்டை அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில், 5 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை அருகே பூங்குடி கிராமத்தில் கோவிலூரை சேர்ந்த வைரமணி (வயது 44) என்பவர் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். கோவில் திருவிழாக்கள், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு வாண வேடிக்கைக்கு வெடிகள் மற்றும் நாட்டு வெடிகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.

இந்த ஆலையில் வெடி மருந்து தயாரிக்கும் கூடமானது சிறிய கட்டிடத்தில் இயங்கி வந்தது. இந்த கட்டிடத்தில் நேற்று 7 பேர் வெடிகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

வெடி விபத்து

இந்த நிலையில் நேற்று மாலை 3 மணியளவில் இந்த கட்டிடத்தில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. வெடிகள் வெடித்து சிதறின. இதில் அங்கு பணியாற்றிய 5 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் தீக்காயத்தில் அலறி துடித்தனர். இதற்கிடையே வெடி விபத்தில் வெடிகள் நாலாபுறமும் வெடித்து சிதறின. இந்த பயங்கர சத்தம் அக்கம் பக்கம் கிராமங்கள் வரை கேட்டது. இதனால் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

தீக்காயமடைந்து கிடந்தவர்களை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்சில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்து வரவழைத்தனர். புதுக்கோட்டை, சிப்காட் ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து 2 தீயணைப்பு வாகனங்களில் 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் வந்தனர்.

தைல மரக்காட்டில் தீ

வெடி விபத்து ஏற்பட்ட இடத்தில் இருந்து வெடி சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. ஒவ்வொரு வெடிகளாக வெடித்தப்படி இருந்தது. இதனால் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக அந்த இடத்தின் அருகே செல்ல முடியவில்லை. இதனிடையே வெடி விபத்து நடந்த இடத்தின் அருகே தைல மரக்காடுகள் உள்ளன. இதிலும் தீப்பற்றி எரிந்தது. இதில் ஏற்பட்ட தீயையும் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். வெடி விபத்து நடந்த இடத்திலும் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.

இந்த விபத்தில் கட்டிடம் முழுவதும் இடிந்து தரைமட்டமானது. மேலும் கட்டிடத்தில் இருந்த வெடி பொருட்கள் சிதறின. தீயணைப்பு கருவிகள் தூக்கி வீசப்பட்டு கட்டிடத்தின் வெளிப்பகுதியில் கிடந்தன. தண்ணீர் நிரப்பப்பட்ட டிரம்கள் சிதறி கிடந்தன.

5 பேருக்கு தீவிர சிகிச்சை

தீக்காயமடைந்தவர்களுக்கு பட்டாசு ஆலை உரிமையாளர் வைரமணி உள்ளிட்ட 5 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த வெடி விபத்து தொடர்பாக வெள்ளனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வெடி விபத்திற்கான காரணம் என்ன? முதலில் தீ எங்கு பிடித்தது, வெடி விபத்து ஏற்பட்டது எப்படி? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

1 More update

Next Story