காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு - இளம் காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை


காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு - இளம் காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை
x

அறந்தாங்கி அருகே காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இளம் காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர்.

அறந்தாங்கி,

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே இடையாத்தூரை சேர்ந்த லட்சுமணன் மகன் அருண்(23). அதே பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் மகள் முகேஸ்வரி(15). இவர் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் வாலிபர் அருணும், பள்ளி மாணவி முகேஸ்வரியும் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இவரது காதலுக்கு குடும்பதார்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி காதலன் அருண் அக்கா திருமணம் நடந்துள்ளது. இந்த திருமண விழாவில் மாணவி முகேஸ்வரி சென்று வந்துள்ளார். அதனால் முகேஸ்வரியை பெற்றோர்கள் மீண்டும் கண்டித்து உள்ளனர். இந்த நிலையில் மாணவி முகேஸ்வரியை நேற்று இரவு காணவில்லை என்று பெற்றோர்கள் அக்கம் பக்கத்தில் தேடியுள்ளனர்.

அப்போது வீட்டிற்கு அருகே உள்ள ஆலமரத்தில் வாலிபர் அருண் மற்றும் மாணவி முகேஸ்வரி தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளனர். அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கண்ணீர்விட்டு கதறி அழுதனர்.

பின்னர், இதுகுறித்து தகவல் அறிந்த நாகுடி போலீசார் சம்பவயிடம் வந்து தற்கொலை செய்து உயிரிழந்த இரண்டு பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story