நாடாளுமன்ற தேர்தல்: நெல்லை தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் திடீர் மாற்றம்


நாடாளுமன்ற தேர்தல்: நெல்லை தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் திடீர் மாற்றம்
x
தினத்தந்தி 23 March 2024 12:38 PM GMT (Updated: 23 March 2024 1:21 PM GMT)

நெல்லை அ.தி.மு.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஜான்சிராணி திசையன்விளை பேரூராட்சி மன்ற தலைவராக உள்ளார்.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தலில் நெல்லை உள்பட 33 தொகுதிகளில் அ.தி.மு.க போட்டியிடுகிறது. அனைத்து தொகுதிகளுக்குமான வேட்பாளர்களையும் அ.தி.மு.க அறிவித்துள்ளது. அந்த வகையில், நெல்லை தொகுதி வேட்பாளராக சிம்லா முத்துச்சோழன் அறிவிக்கப்பட்டார். 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேதலில் ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்து தி.மு.க சார்பில் சிம்லா முத்துச்சோழன் போட்டியிட்டார்.

அந்த தேர்தலில் சிம்லா முத்துச்சோழன் தோல்வி அடைந்தார். அதன்பிறகு கட்சியில் அவருக்கு போதிய முக்கியத்துவம் கிடைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால், அதிருப்தி காரணமாக அண்மையில் அ.தி.மு.கவில் சிம்லா முத்துச்சோழன் இணைந்தார்.

இந்த நிலையில், வரும் நாடாளுமன்ற தேதலில் நெல்லை தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராக சிம்லா முத்துச்சோழன் அறிவிக்கப்பட்டார். ஜெயலலிதாவை எதிர்த்து நின்ற சிம்லா முத்துச்சோழனுக்கு வாய்ப்பளிக்கப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில், நெல்லை தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளார். நெல்லை தொகுதியில் சிம்லா முத்துச்சோழனுக்கு பதிலாக ஜான்சிராணி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜான்சிராணி திசையன் விளை பேரூராட்சி மன்ற தலைவராக உள்ளார்.


Next Story