தமிழ் மொழி தகுதித் தாள் தேர்ச்சி கட்டாயம் - ஆசிரியர் தேர்வு வாரியம்


தமிழ் மொழி தகுதித் தாள் தேர்ச்சி கட்டாயம் - ஆசிரியர் தேர்வு வாரியம்
x

டி.என்.பி.எஸ்.சி.யை போல ஆசிரியர் தேர்வு வாரியமும் தமிழ் மொழி தகுதித் தாள் தேர்ச்சி கட்டாயம் என அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் 155 விரிவுரையாளர் பணியிடங்களில் இதனை நடைமுறைப்படுத்துகிறது.

சென்னை:

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி 24 மூத்த விரிவுரையாளர், 82 விரிவுரையாளர், 49 இளநிலை விரிவுரையாளர் என மொத்தம் 155 காலி பணியிடங்கள் இருப்பதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காலி பணியிடங்களுக்கு எப்போது விண்ணப்பிக்க வேண்டும்? விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி எப்போது? என்பது போன்ற விவரங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் வெளியிட இருக்கிறது. அதேபோல் இந்த பணியிடங்களுக்கு தேர்வு கணினி வழியாகவே நடத்தப்பட உள்ளது. அது தொடர்பான அறிவிப்பும் அப்போதே தெரிவிக்கப்பட உள்ளது.

தமிழகத்தில் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் பிற மாநிலத்தவர்கள் பங்கு பெற்று பணி நியமனம் பெறுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில், போட்டித் தேர்வுகளை நடத்தக்கூடிய தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தமிழ் தாள் தகுதி தேர்வு அறிமுகப்படுத்தியது.

இந்த தகுதித் தாள் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, அதற்கு அடுத்தபடியாக எழுதியிருக்கும் பொதுப்பாட பிரிவு வினாக்கள் கணக்கில் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதேபோல தற்போது ஆசிரியர் தேர்வு வாரியமும் தமிழ் மொழி தகுதி தாள் தேர்வு இந்த விரிவுரையாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பில் அறிமுகப்படுத்தி இருக்கிறது.

இந்த விரிவுரையாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்கள் 50 மதிப்பெண்ணுக்கு கேட்கப்படும் தமிழ் மொழி தகுதித் தாள் தேர்வில் 20 (40 சதவீதம்) மதிப்பெண் பெற வேண்டும். அப்படி பெற்றால் மட்டுமே 'பகுதி ஆ' பிரிவில் பாடம் சார்ந்த 150 மதிப்பெண்களுக்கான வினாக்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 150 மதிப்பெண்ணில் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்ணாக எஸ்.சி. பிரிவினருக்கு 68 மதிப்பெண்ணும், எஸ்.டி. பிரிவினர் 60 மதிப்பெண்ணும், மற்ற பிரிவினருக்கு 75 மதிப்பெண்ணும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.


Next Story