அனுமந்தை ஏரி அருகே தரைப்பாலம் சேதம் அடைந்துள்ளதால் பொதுமக்கள் அவதி


அனுமந்தை ஏரி அருகே தரைப்பாலம் சேதம் அடைந்துள்ளதால் பொதுமக்கள் அவதி
x

அனுமந்தை ஏரி அருகே தரைப்பாலம் சேதம் அடைந்துள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்ககொளத்தூர் ஒன்றியத்துக்குட்பட்டது குன்னவாக்கம் ஊராட்சி. இந்த ஊராட்சிக்குட்பட்ட அனுமந்தை ஏரி தற்போது பெய்த மழையால் நிரம்பி உபரிநீர் ஏரிக்கரையின் மேலேயிருந்து கீழே இறங்கும் சாலையின் குறுக்கேயுள்ள தரைபாலத்தின் மீது ஆறாக ஒடுகிறது. இதனால் அந்த தரைபாலம் முற்றிலும் சேதமடைந்து ஆங்காங்கே ராட்சத பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது.

மேலும் தரைப்பாலத்தில் உள்ள சிமெண்டு கலவைகள் உடைத்து இருப்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. மகேந்திரா சிட்டியில் இருந்து அனுமந்தை கிராமம் வழியாக இந்த தரைபாலத்தை கடந்துதான் குன்னவாக்கம், பட்வாக்கம், திருவடிசூலம், திருப்போரூர் கூட்ரோடு வழியாக திருக்கழுக்குன்றம், திருப்போரூர் செல்லும் மிக எளிதான குறுக்கு வழியாகும்.

பகல் நேரத்திலேயே இருசக்கர வாகனங்களில் செல்வோர்கள் தண்ணீர் மூழ்கிய தரைபாலத்தை கடக்கும் போது வழி தெரியாமல் பள்ளத்தில் விழுந்து விபத்துகள் ஏற்படுகிறது.

செங்கல்பட்டை சுற்றி வந்து மேற்கண்ட ஊர்களுக்கு செல்லவேண்டுமானால் அதிக நேரம் ஆகும் என்பதால் இந்த குறுக்கு வழியையே சிங்கப்பெருமாள் கோவில், பரனூர், செட்டிபுண்ணியம், வீராபுரம் உள்ளிட்ட கிராம மக்களும் இந்த பாதையில் செல்கின்றனர். ஆகவே ஆபத்தான முறையில் உள்ள இந்த தரைப்பாலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story