குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்


குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 5 Sep 2023 6:45 PM GMT (Updated: 5 Sep 2023 6:46 PM GMT)

கூடலூரில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தேனி

தேனி மாவட்டத்தில் கூடலூர் 2-ம் நிலை நகராட்சியாக இயங்கி வருகிறது. இந்த பகுதி மக்களுக்கு லோயர்கேம்ப் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக இங்கு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து வார்டு பகுதி மக்களுக்கும் 3 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் 13-வது வார்டு எம்.ஜி.ஆர். காலனிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் குடிநீர் கேட்டு கூடலூர்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கூடலூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதற்கிடையே கூடலூர் நகராட்சி அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நகராட்சி நிர்வாகத்தினர் உடனடியாக அந்த பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டதை அறிந்த பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story