மயானத்திற்கு இடம் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்


மயானத்திற்கு இடம் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
x
ராணிப்பேட்டை

சாலை மறியல்

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த ஜம்புகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட அருந்ததி பாளையத்திற்கு மயானம் அமைத்துத்தரக்கோரி சென்னை-பெங்களூரு அதிவிரைவு சாலையில், சாலை பணியில் ஈடுபட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட வாகனங்களை சிறை பிடித்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பூங்கொடி, சோளிங்கர் தாசில்தார் ஆனந்தன் ஆகியோர் நேரில் சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மயானத்திற்கு இடம்

அப்போது பொதுமக்கள் தங்கள் பகுதியில் இருந்த மயானப்பகுதியை சென்னை -பெங்களூரு அதிவிரைவு சாலைக்காக எடுத்துக்கொண்டனர். இதனால் எங்கள் பகுதிக்கு மயானத்திற்கு இடம் வங்க வேண்டும் என வருவாய்த் துறையினரிடம் பல முறை மனு அளித்தும் இடம் தேர்வு செய்யவில்லை. உடனடியாக மயானத்திற்கு இடம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

அதற்கு மயானம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்து தருவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதனைத் தொடர்ந்து கிராமமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story