பொன்னேரி சப்-கலெக்டர் அலுவலகம் எதிரே ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க கோரி பொதுமக்கள் சாலைமறியல்


பொன்னேரி சப்-கலெக்டர் அலுவலகம் எதிரே ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க கோரி பொதுமக்கள் சாலைமறியல்
x

ஆவூர் கிராமத்தில் அரசு ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க கோரி பொன்னேரி சப்-கலெக்டர் அலுவலகம் எதிரே பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர்

ஆக்கிரமிப்பு

பொன்னேரி அடுத்த ஆவூர் கிராமத்தில் காந்தி ெஜயந்தி அன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள நீர்நிலை புறம்போக்கு நிலத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளனர் என புகார் தெரிவித்தனர். ஆக்கிரமிப்பு இடங்களை அரசு அதிகாரிகள் மீட்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து பொன்னேரி சப்-கலெக்டரிடம் இதுதொடர்பாக மனு அளிக்க தீர்மானிக்கப்பட்டது. அதன்படி நேற்று ஆவூர் கிராம மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் பொன்னேரி சப்-கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

சாலைமறியல்

அப்போது சப்-கலெக்டர் அலுவலகத்தில் இல்லாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அலுவலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த பொன்னேரி தாசில்தார் மதிவாணன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அந்த நேரத்தில் மனு கொடுக்க வந்த பெண்கள் திடீரென சப்-கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே தாசில்தார் மதிவாணன் சாலைமறியலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து ஆக்கிரமிப்பு தொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story