கடலோர பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுங்கள்


கடலோர பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுங்கள்
x
தினத்தந்தி 8 Dec 2022 6:45 PM GMT (Updated: 8 Dec 2022 6:46 PM GMT)

புயல் கரையை கடக்கும் சமயங்களில் கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

கடலூர்

தெற்கு அந்தமான் கடற்பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மையம் மேலும் வலுப்பெற்று புயலாக உருவாகியுள்ளது. இதனால் கடலூர் மாவட்டத்தில் இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும் (சனிக்கிழமை) பலத்த காற்று வீசுவதுடன், பரவலாக கனமழை பெய்ய கூடும் என இந்திய மண்டல வானிலை மையம் அறிவித்துள்ளது.

புயல் கரையை கடக்கும் சமயங்களில் கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். மேலும் பொதுமக்கள் தங்களுடைய சான்றுகள், ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ஓட்டுனர் உரிமம், வங்கி கணக்கு புத்தகங்கள், கல்விச்சான்றிதழ்கள், சொத்து பத்திரங்கள் உள்ளிட்ட அடையாள ஆவணங்களை நீர் படாத வகையில் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவேண்டும்.

உணவு பொருட்கள் தயார்

இதுதவிர மெழுகுவர்த்தி மற்றும் தீப்பெட்டி, அத்தியாவசியப் பொருட்கள் (தண்ணீர், பிஸ்கெட், ரொட்டி போன்ற உலர்ந்த உணவு வகைகள்), எரிவாயு மற்றும் மண்எண்ணெய், மருந்து, பால் பவுடர், மின்விளக்குகள், உபரி பேட்டரிகள் மற்றும் சுகாதாரத்தை பேணிக் காக்க தேவையான பொருட்களை வாங்கி தயாராக வைத்திருக்க வேண்டும். கடலோர பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், பழுதடைந்த, பலவீனமான வீடுகள், நீர் சூழக்கூடிய மற்றும் நீர் உட்புகும் சாத்தியக்கூறு உள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், தங்கள் இருப்பிடத்திற்கு அருகே மாவட்ட நிர்வாகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புயல் பாதுகாப்பு மையங்களுக்கு சென்று தங்க வேண்டும். அங்கு மக்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story