புதிதாக மதுக்கடை திறக்க கிராம மக்கள் எதிர்ப்பு


புதிதாக மதுக்கடை திறக்க கிராம மக்கள் எதிர்ப்பு
x

திருவோணம் அருகே புதிதாக அரசு மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர்

ஒரத்தநாடு;

திருவோணம் அருகே புதிதாக அரசு மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதிதாக மதுக்கடை

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா திருவோணத்தை அடுத்துள்ள வீரடிபட்டி வீரப்பையா சுவாமி கோவில் அருகில் ஒரு தனி நபர் கட்டிடத்தில் புதிதாக அரசு மதுக்கடை திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.இதைத்தொடர்ந்து இந்த இடத்தில் மதுக்கடை திறப்பதற்கான முன்னேற்பாடு பணிகள் தொடங்கியது. இதை அறிந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை அங்கு திரண்டனர். இவர்கள் கோவில், பள்ளிக்கூடம், குடியிருப்புகள் உள்ள இந்த பகுதியில் மதுக்கடை திறக்கப்பட்டால் இங்கு வசிக்கும் பெண்கள் மற்றும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படும் எனக்கூறி இங்கு புதிதாக மதுக்கடை திறக்க கூடாது என வலியுறுத்தினர். மேலும் மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட உள்ளதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.

போலீசார் பேச்சுவார்த்தை

இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற ஒரத்தநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், கிராம மக்களின் கோரிக்கை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story