பழனி அருகே பொதுமக்கள் சாலை மறியல்


பழனி அருகே பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 10 Oct 2023 9:30 PM GMT (Updated: 10 Oct 2023 9:30 PM GMT)

பழனி அருகே வேகத்தடையில் எச்சரிக்கை கோடு வரையக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

பழனி அருகே கொழுமம் சாலையில், பாப்பம்பட்டி பிரிவு பகுதியில் வேகத்தடை ஒன்று உள்ளது. ஆனால் அந்த வேகத்தடையில் எச்சரிக்கை கோடு இல்லை. இதனால் சாலையில் வேகத்தடை இருப்பது தெரியவில்லை என பாப்பம்பட்டி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். எச்சரிக்கை கோடு இல்லாததால் வேகத்தடை பகுதியில் அடிக்கடி விபத்து நடப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்தநிலையில் பாப்பம்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் நேற்று பாப்பம்பட்டி பிரிவு பகுதிக்கு வந்தனர். அப்போது அவர்கள் பழனி-கொழுமம் சாலையில் திடீரென்று மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பழனி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பாப்பம்பட்டி பிரிவில் உள்ள வேகத்தடையில் எச்சரிக்கை கோடு வரைய வேண்டும் என்று வலியுறுத்தினர். அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த மறியலால் பழனி-கொழுமம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story