கோடை வெயில் வெப்பத்தில் இருந்து பொதுமக்கள் தங்களை காத்துக்கொள்ள வேண்டும்


கோடை வெயில் வெப்பத்தில் இருந்து பொதுமக்கள் தங்களை காத்துக்கொள்ள வேண்டும்
x

கோடை வெயில் வெப்பத்தில் இருந்து பொதுமக்கள் தங்களை காத்துக்கொள்ள வேண்டும்

திருவாரூர்

கோடை வெயில் வெப்பத்தில் இருந்து பொதுமக்கள் தங்களை காத்துக்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் சாருஸ்ரீ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்

திருவாரூர் மாவட்டத்தில் கோடைவெயில் தொடக்கத்திலேயே அதிக வெப்பம் இருந்து வருவதால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். வெப்பம் மற்றும் வெப்ப அலை பாதிப்புக்களை தடுக்கவும், வெயிலில் இருந்து தற்காத்து கொள்ளவும் உடலின் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்க தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பயணத்தின் போது குடிநீரை எடுத்துச்செல்ல வேண்டும். ஒ.ஆர்.எஸ். எலுமிச்சை ஜீஸ், மோர் மற்றும் பழச்சாறுகள் குடிக்க வேண்டும். பருவகால பழங்கள், காய்கறிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவுகளை உண்ண வேண்டும். முடிந்தவரை வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

நல்ல காற்றோட்டம் மற்றும் குளிர்ந்த இடங்களில் இருக்க வேண்டும். மெல்லிய தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். வெளியில் செல்லும் போது காலணிகளை கட்டாயம் அணிய வேண்டும். மதிய நேரத்தில் வெளியே செல்லும் போது குடை கொண்டு செல்ல வேண்டும். மழலைப்பள்ளிகளை கோடை காலம் முடியும் வரை செயல்படுத்த வேண்டாம். குழந்தைகளை வாகனங்களில் தனியே அமர்த்திவிட்டு வெளியே செல்லக்கூடாது.

12 மணிக்கு மேல் பணி செய்யாமல்

முதியவர்களுக்கான வழிமுறைகளாக, தனியே வசிக்கும் முதியவர்களின் உடல்நிலையை தினமும் இருமுறை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். முதியவர்களின் அருகாமையில் தொலைபேசி உள்ளதா என உறுதிப்படுத்திக்கொள்ளவும், வெப்ப அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகத்தோன்றினால், அவர்களின் வெப்பத்தை தணிக்க ஈரமான துண்டுகளால் கழுத்து மற்றும் கைகளில் துடைக்க வேண்டும். குளிர்ந்த நீரில் குளிக்க வைக்க வேண்டும். போதிய இடைவேளைகளில் நீர் அருந்துவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

100 நாட்கள் பணியின்போது நற்பகல் 12 மணிக்கு மேல் பணி செய்யாமல் இருக்க வேண்டும். கால்நடைகளை நிழல் தரும் கூரை அடியில் கட்டவும், போதிய வசதி செய்து கொடுக்கவும், அவசியமாக போதுமான அளவு தண்ணீர் கொடுக்க வேண்டும், கால்நடைகளுக்கு தீவனங்களை வெட்ட வெளியில் போடவேண்டும். அடைக்கப்பட்ட இடத்தில் கால்நடைகளை கட்ட வேண்டாம்.

கியாஸ் சிலிண்டர்களை கழற்றி வைப்பது நல்லது

பறவைகளுக்கு போதுமான நிழற்கூரைகள் அமைத்துக்கொடுத்து போதுமான நீர் கொடுக்க வேண்டும். செல்லப்பிராணிகளை வாகனங்களில் அடைத்து வைக்க வேண்டாம். மேலும் பருவநிலை மாற்றங்களினால் இந்தாண்டு கோடை வெயில் தொடக்கத்திலேயே வெப்பம் அதிகமாக உள்ளதால் மாடி வீடுகளிலும், கூரை வீடுகளிலும் உள்ள மின் ஒயர்கள் உருகி சார்ட்சர்க்யூட் ஏற்பட்டு அதில் ஏற்படும் தீப்பொறியினால் கூரை வீடுகள் எளிதில் தீப்பிடிக்க வாய்ப்புள்ளது. மேலும் மாடி வீடுகளில் மேல் கூரையில் ஏற்படும் அதிக வெப்பத்தினால் வீட்டின் உள்ளே மேல்புறம் உள்ள இரும்புகள் சூடாகி மின்விசிறி, டியூப்லைட் கழன்று கீழே விழும் தன்மையை பெறுகின்றன.

எனவே கோடைகாலம் முடியும் வரை எச்சரிக்கையாக இருப்பதுடன் கூரை விடுகளில் வசிப்பவர்கள் தண்ணீரை வைத்து கொள்ளலாம். விலை உயர்ந்த பொருட்கள், நில ஆவணங்கள் சான்றிதழ்களை பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம், கியாஸ் சிலிண்டர்களை இரவில் கழற்றி வைப்பது நல்லது. விறகு அடுப்புகளை பயன்படுத்திய பிறகு தண்ணீர் ஊற்றி அனைத்து விட வேண்டும். மண் எண்ணெய் விளக்குகளை கவனமாக கையாள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story