குரங்குகள் தொல்லையால் பொதுமக்கள் அவதி


குரங்குகள் தொல்லையால் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 24 Aug 2023 6:45 PM GMT (Updated: 24 Aug 2023 6:47 PM GMT)

திருக்கடையூர் பகுதியில் குரங்குகள் தொல்லையால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

மயிலாடுதுறை

திருக்கடையூர்:

திருக்கடையூர் பகுதியில் குரங்குகள் தொல்லையால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

சுற்றித்திரியும் குரங்குகள்

திருக்கடையூர் ஊராட்சிக்குட்பட்ட சன்னதி வீதி, தெற்கு வீதி, மேலவீதி, கீழவீதி, வடக்கு மடவிளாகம், தெற்கு மடவிளாகம் உள்ளிட்ட பகுதிகளில் குரங்குகள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இந்த குரங்குகள் வீடுகள் மற்றும் கடைகளுக்குள் புகுந்து அரிசி, காய்கறி பழங்கள் உள்ளிட்ட உணவு பொருட்களை தின்று சேதப்படுத்தி வருகின்றன. மேலும் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள், குழந்தைகள் மற்றும் வயதானவர்களிடம் இருக்கும் உணவு பொருட்களை குரங்குகள் பறித்து செல்கின்றன. ஒருசில நேரங்களில் அவர்களை கடித்து விடுகின்றன. இந்த பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றித்திரிகின்றன.

கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்

தென்னை மரங்களில் குரங்குகள் ஏறி அதில் உள்ள குருத்து மற்றும் தேங்காய்களை கடித்து தின்று சேதப்படுத்துகின்றன. குரங்குகள் தொல்லையால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே திருக்கடையூர் ஊராட்சியில் சுற்றித்திரியும் குரங்குகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதியில் கொண்டுவிட வேண்டும் என அப்பகுதி ெபாதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story