நான்கு வழிச்சாலை பணிக்காக வெட்டப்படும் பனை மரங்கள்


நான்கு வழிச்சாலை பணிக்காக வெட்டப்படும் பனை மரங்கள்
x
தினத்தந்தி 7 Nov 2022 7:00 PM GMT (Updated: 7 Nov 2022 7:00 PM GMT)

சீர்காழி அருகே நான்கு வழிச்சாலை பணிக்காக பனை மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. இதனால் இயற்கை ஆர்வலர்கள் வேதனையில் உள்ளனர்.

மயிலாடுதுறை

சீர்காழி அருகே நான்கு வழிச்சாலை பணிக்காக பனை மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. இதனால் இயற்கை ஆர்வலர்கள் வேதனையில் உள்ளனர்.

பனை மரங்கள் வெட்டி அகற்றம்

விழுப்புரம் மாவட்டம் தொடங்கி நாகை மாவட்டம் வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி முதல் தரங்கம்பாடி வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த பணிக்காக பழைய சாலைகளின் இருபுறமும் இருந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்டு வருகிறது.

இந்த பகுதியில் 100 ஆண்டுகளை கடந்த புளிய மரங்கள் வெட்டி அகற்றப்பட்ட நிலையில் எஞ்சி இருந்த பனைமரங்களையும் வெட்டும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருவது இயற்கை ஆர்வலர்களை வேதனை அடைய செய்துள்ளது.

பனை மரம் வளர்ந்து 40 ஆண்டுகளுக்கு பின்னரே பலன் கொடுக்க தொடங்கும். இவ்வாறு சாலையோரம் வளந்த பனைமரங்களில் இருந்து ஏழை எளிய மக்கள் பனை நுங்கு வெட்டி எடுத்து கோடைகாலத்தில் விற்பனை செய்து பிழைத்து வந்தனர்.

சோகத்தில் மக்கள்

சீர்காழி முதல் தரங்கம்பாடி வரை 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினரின் வாழ்வாதாரமாக விளங்கிய பனை மரங்கள் முழுமையாக வெட்டி அகற்றப்பட்டு வருகிறது. 50 அண்டுகள் முதல் 70 ஆண்டுகளை கடந்த பனை மரங்கள் எந்திரங்கள் மூலம் அடுத்தடுத்து வெட்டி வீழ்த்தப்படுவது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கோடை காலத்தில் வருமானம் ஈட்ட இயற்கை வழங்கிய வரப்பிரசாதமாக பனை மரங்களை இந்த பகுதி மக்கள் பார்த்தனர்.

இந்த நிலையில் பனை மரங்கள் சாலை பணிகளுக்காக வெட்டப்பட்டு வருவது, அதனை நம்பிருந்த ஏழை வியாபாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் மரத்தில் வாழ்ந்த பறவைகள் குரங்குகள் இடம் பெயரும் நிலையும் ஏற்பட்டுள்ளது. வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக மீண்டும் பனை மரங்களை சாலையோரம் நடுவதற்்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இயற்கை ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.


Next Story