பாரம்பரிய முறைப்படி சூரிய கிரகணத்தை அறிந்த பொதுமக்கள்


பாரம்பரிய முறைப்படி சூரிய கிரகணத்தை அறிந்த பொதுமக்கள்
x

நாடு முழுவதும் இன்று மாலை சூரிய கிரகணம் பிடிக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்த நிலையில் கிராமங்களில் பாரம்பரிய முறைப்படி உலக்கையைப் பார்த்து தெரிந்து கொண்டனர்.

அணைக்கட்டு:

நாடு முழுவதும் இன்று மாலை 5 மணி முதல் 5.44 மணி வரை சூரிய கிரகணம் பிடிக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர். இதைப் பார்ப்பதற்கு பல்வேறு வழிமுறைகளை விஞ்ஞானிகள் அறிவித்திருந்தனர்.

ஆனால் கிராமப் பகுதிகளில் காலகாலமாக தொன்று தொட்டு வரும் பாரம்பரிய வழக்கப்படி சூரிய கிரகணம் முழுமையாக பிடித்து உள்ளதா என அறிய, வெண்கலத்தில் உலக்கை வைத்து எந்த ஆதாரவும் இல்லாமல் உலக்கை நின்றால் சூரிய கிரகணம் பிடித்துள்ளது என பொதுமக்கள் அறிந்து கொள்வார்கள்.

அதன்படி இன்று அணைக்கட்டு தாலுக்கா அப்புக்கல் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மாலை 5 மணிக்கு திறந்த வெளியில் மஞ்சள் சுண்ணாம்பு கரைத்து வெண்கலத்தில் ஊற்றி உலக்கை ஒன்றை நிறுத்தி வைத்தனர். சூரிய கிரகணம் மெல்ல மெல்ல தொடங்கிய போது உலக்கை தானாகவே நேர்கோட்டில் நின்று பொதுமக்களை அசத்தியது.

பொதுமக்கள் வெறும் கண்ணால் சூரியனை பார்க்காமல் உலக்கையைப் பார்த்து சூரிய கிரகணம் பிடித்துள்ளது என அறிந்து கொண்டனர். இந்த நிகழ்வை பல்வேறு பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பார்த்த வண்ணம் இருந்தனர்.


Next Story