மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்


மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 29 May 2023 6:45 PM GMT (Updated: 29 May 2023 6:45 PM GMT)

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் உரிமை சங்கத்தினர் நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து அங்குள்ள நுழைவுவாயில் முன்பு அமர்ந்து திடீரென காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே அவர்களிடம் மாவட்ட கலெக்டர் பழனி, சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மாற்றுத்திறனாளிகள் கூறுகையில், விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் பணியை கடந்த 5 ஆண்டுகளாக பாலகிருஷ்ணன் என்ற மாற்றுத்திறனாளி செய்து வந்தார். அவரை பணியில் இருந்து திடீரென நீக்கி விட்டனர். அவரை மீண்டும் பணியில் அமர்த்தக்கோரி ஏற்கனவே மனு அளித்த நிலையில் இதுநாள் வரையிலும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அவரை மீண்டும் பணியமர்த்த வேண்டும், அனைத்து அரசு அலுவலகங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு குறைதீர் அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளாரா என்பதை கண்காணிக்க வேண்டும், மாற்றுத்திறனாளிகள் பணியாளரிடம் அணுக வேண்டிய நடைமுறை பற்றிய தகவலை அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்று முறையிட்டனர். இதை கேட்டறிந்த மாவட்ட கலெக்டர், உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அதன் பிறகு அவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story