போலீசாரை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் மறியல்


போலீசாரை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் மறியல்
x

போலீசாரை கண்டித்து கொடைரோடு, செம்பட்டியில் மாற்றுத்திறனாளிகள் மறியலில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட முயன்ற மாற்றுத்திறனாளிகளை போலீசார் குண்டு கட்டாக தூக்கி நேற்று கைது செய்தனர். இதனையடுத்து போலீசாரை கண்டித்து செம்பட்டி பஸ் நிலையம் அருகே, ஆத்தூர் ஒன்றிய மாற்றுத்திறனாளிகள் சார்பில் மறியல் நடந்தது.

இதற்கு மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க ஒன்றிய செயலாளர் மலைச்சாமி தலைமை தாங்கினார். மறியல் குறித்து தகவல் அறிந்த செம்பட்டி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று மாற்றுத்திறனாளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர்.

இதேபோல் பழனியில் மயில் ரவுண்டானா அருகே மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் ஈடுபட்டனர். இதற்கு சங்க மாவட்ட செயலாளர் நூருல்ஹுதா தலைமை தாங்கினார். போராட்டத்தின்போது தர்மபுரியில் போராடிய மாற்றுத்திறனாளிகளை போலீசார் கைது செய்ததை கண்டித்து கோஷமிட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கன சங்கம் சார்பில் கொடைரோட்டில் மறியல் நடந்தது. இதற்கு நிலக்கோட்டை ஒன்றிய செயலாளர் சசிக்குமார் தலைமை தாங்கினார். தர்மபுரியில் குண்டுகட்டாக தூக்கி, மாற்றுத்திறனாளிகளை கைது செய்த போலீசார் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமி தலைமையிலான போலீசார் மாற்றுத்திறனாளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.

சாணார்பட்டியில், ஒன்றிய செயலாளர் கருப்புசாமி தலைமையில் மாற்றுத்திறனாளிகள் மறியல் செய்தனர். இதனையடுத்து போலீசார் அவர்களை சமரசம் செய்து கலைந்து போக செய்தனர். மறியல் காணரமாக, அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story