மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
நாகை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் 246 மனுக்கள் பெறப்பட்டன.
நாகை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் 246 மனுக்கள் பெறப்பட்டன.
குறை தீர்க்கும் கூட்டம்
நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தாங்கினார்.மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வங்கிக் கடன், உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மொத்தம் 246 மனுக்கள் பெறப்பட்டது.
பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டார். கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நாகை, வேதாரண்யம், கீழ்வேளுர், திருக்குவளை ஆகிய வட்டத்திற்குட்பட்ட கிராமங்களை சேர்ந்த 19 மாற்றுத்திறன் கொண்ட பயனாளிகளுக்கு சுயதொழில் புரிவதற்காக தலா ரூ.25 ஆயிரம் என மொத்தம் ரூ.4 லட்சத்து 75 ஆயிரம் மானியத்துடன் கூடிய வங்கி கடனுதவிக்கான காசோலைகளை வழங்கினார்.
இலவச தையல் எந்திரம்
மேலும் காதொலிக்கருவி, 3 சக்கர சைக்கிள், செயற்கை கால் போன்றவைகளையும் வழங்கினார். மேலும் வருவாய்த்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாவையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு இலவச தையல் எந்திரத்தினையும் வழங்கினார்.
இதில் சமூக பாதுகாப்பு துணை கலெக்டர் ராஜன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராமன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.