'மக்கள் நலத்திட்டங்களை சிறந்த முறையில் செயல்படுத்த வேண்டும்'- ஞானதிரவியம் எம்.பி. பேச்சு


மக்கள் நலத்திட்டங்களை சிறந்த முறையில் செயல்படுத்த வேண்டும்- ஞானதிரவியம் எம்.பி. பேச்சு
x
தினத்தந்தி 15 July 2023 7:41 PM GMT (Updated: 16 July 2023 6:28 AM GMT)

'மக்கள் நலத்திட்டங்களை சிறந்த முறையில் செயல்படுத்த வேண்டும்' என்று நெல்லை மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டத்தில் ஞானதிரவியம் எம்.பி. பேசினார்.

திருநெல்வேலி

கண்காணிப்பு குழு கூட்டம்

அரசு மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்ட பணிகள் குறித்து மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம், நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. ஞானதிரவியம் எம்.பி. தலைமை தாங்கினார். கலெக்டர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சுரேஷ் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் இந்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், தேசிய சுகாதார திட்டம், தீனதயாள் உபாத்தியாய கிராம மின்வசதி திட்டம், பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டம், தூய்மை பாரத இயக்கம், தேசிய ஊரக குடிநீர் திட்டம், மாவட்ட நீர் வடிப்பகுதி மேம்பாட்டு முகமை திட்டம், தேசிய சமூக உதவி திட்டங்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள், தேசிய நில ஆவணங்கள் கணினி மயமாக்கல் திட்டம், பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம், தேசிய நெடுஞ்சாலை திட்டம், தேசிய மின் ஆளுமை திட்டம், மாவட்டம் முன்னோடி வங்கி, மாவட்ட தொழில் மையம், பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி வளர்ச்சி திட்டம், ஜல்ஜீவன் மிஷன் திட்டம், வேளாண்மை துறை வனத்துறை மருத்துவ துறை பிரதம மந்திரி கிராம முன்னேற்ற திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

மக்கள் நலன் கருதி

கூட்டத்தில் ஞானதிரயம் எம்.பி. பேசியதாவது:-

நெல்லை மாவட்டத்தில் செயல்படுத்தி வரும் திட்டங்கள் அனைத்தும் மக்கள் நலன் கருதி விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். மக்களின் தேவைகளை அறிந்து அவர்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையில் பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்த வேண்டும். இந்த திட்டங்கள் அனைத்தும் சிறந்த முறையில் செயல்படுத்தி பொதுமக்களுக்கு முழுமையாக சென்றடையும் விதத்தில் அரசு அலுவலர்கள் பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமார் மாநகராட்சி ஆணையாளர் சிவ கிருஷ்ணமூர்த்தி, பயிற்சி உதவி கலெக்டர் கோகுல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story