பெரம்பலூர் மாவட்டத்தில் 97.95 சதவீதம் பேர் தேர்ச்சி


பெரம்பலூர் மாவட்டத்தில் 97.95 சதவீதம் பேர் தேர்ச்சி
x
தினத்தந்தி 20 Jun 2022 8:11 PM GMT (Updated: 20 Jun 2022 8:32 PM GMT)

பெரம்பலூர் மாவட்டத்தில் 97.95 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பெரம்பலூர்

இணையதளத்தில் தேர்வு முடிவு

தமிழகத்தில் 2022-ம் ஆண்டு மே மாதம் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளுக்கு தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. காலை 9.30 மணியளவில் அரசு தேர்வுத்துறை இயக்ககத்தின் மூலம் அதிகாரப்பூர்வமான இணையதள முகவரிகளில் பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியானது.

மாணவ-மாணவிகளின் மன உளைச்சலை தடுக்கும் பொருட்டு கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து புதிய முறை கொண்டு வரப்பட்டது. அதன்படி இந்த ஆண்டும் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளின் விவரம் வெளியிடப்படவில்லை. மாணவ-மாணவிகளின் மதிப்பெண் விவரம் அனைத்தும் அந்தந்த பள்ளிகளுக்கு இ-மெயில் மூலமாக அனுப்பப்பட்டது.

தமிழகத்திலேயே முதலிடம்

பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 77 பள்ளிகளை சேர்ந்த 3 ஆயிரத்து 933 மாணவர்களும், 3 ஆயிரத்து 734 மாணவிகளும் என மொத்தம் 7 ஆயிரத்து 667 பேர் தேர்வு எழுதினர். இதில் 3 ஆயிரத்து 836 மாணவர்களும், 3 ஆயிரத்து 674 மாணவிகளும் என மொத்தம் 7 ஆயிரத்து 510 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 97.95 ஆகும். பிளஸ்-2 அரசு பொதுத் தேர்வில் தேர்ச்சி சதவீதத்தில் தமிழகத்திலேயே பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

96.47 சதவீதம் தேர்ச்சி

இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 87 பள்ளிகளை சேர்ந்த 3 ஆயிரத்து 923 மாணவர்களும், 4 ஆயிரத்து 555 மாணவிகளும் என மொத்தம் 8 ஆயிரத்து 478 பேர் தேர்வு எழுதினர். இதில் 3 ஆயிரத்து 742 மாணவர்களும், 4 ஆயிரத்து 437 மாணவிகளும் என மொத்தம் 8 ஆயிரத்து 179 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 96.47 ஆகும்.

செல்போனில் குறுஞ்செய்தி

மாணவ-மாணவிகளுக்கு தேர்வு முடிவுகள், அவர்களின் பெற்றோர் செல்போனில் எஸ்.எம்.எஸ். (குறுஞ்செய்தி) மூலம் அனுப்பப்படும் என்று பள்ளி கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி செல்போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தேர்வு முடிவு வந்தது.இதில் அவர்களது பெயர், பாடவாரியாக அவர்கள் பெற்ற மதிப்பெண்கள், மொத்த மதிப்பெண்கள், தேர்ச்சி அல்லது தோல்வி என்ற விவரம் அனுப்பப்பட்டது. இதனால் மாணவ-மாணவிகள் தேர்வு முடிவுகளை தங்களது பெற்றோரின் செல்போன் மூலம் வீட்டில் இருந்து அறிந்து கொண்டனர். மேலும் மாணவ-மாணவிகள் சிலர் தாங்கள் பயிலும் பள்ளிக்கு வந்து ஆசிரியர்களின் செல்போன்கள் மூலம் பிளஸ்-2 தேர்வு முடிவுக்கான இணையதள முகவரிகளில் தங்களது பதிவெண், பிறந்த தேதி ஆகிய விவரத்தை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொண்டனர்.


Next Story