பெரியகுளம்: 182 ஏக்கர் அரசு நிலம் அபகரிப்பு வழக்கு - வட்டாட்சியர் கைது


பெரியகுளம்: 182 ஏக்கர் அரசு நிலம் அபகரிப்பு வழக்கு - வட்டாட்சியர் கைது
x
தினத்தந்தி 16 Nov 2022 2:10 PM GMT (Updated: 16 Nov 2022 2:15 PM GMT)

பெரியகுளம் பகுதியில் 182 ஏக்கர் அரசு நிலம் அபகரிப்பு வழக்கு தொடர்பாக வட்டாட்சியர் கிருஷ்ணகுமாரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.

பெரியகுளம்,

தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் அரசு நிலங்களை சிலர் அதிகாரிகள் துணையுடன் அபகரித்ததாக புகார்கள் எழுந்தன. இந்த புகார்கள் குறித்து பெரியகுளம் சப்-கலெக்டர் ரிஷப் விசாரணை நடத்தினார்.

அதில், பெரியகுளம் தாலுகாவுக்கு உட்பட்ட வடவீரநாயக்கன்பட்டியில் 109 ஏக்கர், தாமரைக்குளத்தில் 60 ஏக்கர், கெங்குவார்பட்டியில் 13 ஏக்கர் என மொத்தம் 182 ஏக்கர் அரசு நிலங்கள் அபகரிக்கப்பட்டது தெரியவந்தது. இந்த நிலங்களை அதிகாரிகள் துணையுடன் பெரியகுளம் அ.தி.மு.க. முன்னாள் ஒன்றிய செயலாளர் அன்னபிரகாஷ் மற்றும் தனிநபர்கள் சிலர் அபகரித்து தங்களின் பெயரில் பட்டா பெற்றனர்.

இதற்கு உடந்தையாக இருந்த வட்டாட்சியர்கள் கிருஷ்ணகுமார் மற்றும் ரத்னமாலா, துணை வட்டாட்சியர்கள் சஞ்சீவ்காந்தி, மோகன் ராம், நில அளவையர் சக்திவேல், உதவியாளர் பிச்சைமணி மற்றும் விஏஓ சுரேஷ் ஆகிய 7 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். மோசடியாக வழங்கப்பட்ட பட்டாக்கள் ரத்து செய்யப்பட்டு மீண்டும் அந்த நிலங்கள் அரசு நிலங்களாக மாற்றப்பட்டன.

மேலும், பெரியகுளம் சப்-கலெக்டர் ரிஷப் கொடுத்த புகார்களின் பேரில், பெரியகுளத்தில் ஆர்.டி.ஓ.வாக பணியாற்றிய ஆனந்தி, ஜெயப்பிரிதா மற்றும் வட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர்கள், நில அளவையர்கள் மற்றும் தனிநபர்கள் என மொத்தம் 14 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 3 வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலம் அபகரிப்பு சம்பந்தமாக தேனி மாவட்ட குற்றப்பிரிவில் பதிவு செய்யப்பட்ட 3 வழக்குகளையும் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி. சைலேந்திரபாபு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உத்தரவிட்டார்.

இதனையடுத்து, நில அபகரிப்புக்கு உடந்தையாக இருந்த துணை வட்டாட்சியர்கள் சஞ்சீவ்காந்தி, மோகன் ராம், நில அளவையர் சக்திவேல், உதவியாளர் பிச்சைமணி மற்றும் விஏஓ சுரேஷ் ஆகியோரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதன்பின் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதற்கிடையே வட்டாட்சியர்கள் கிருஷ்ணகுமார் மற்றும் ரத்னமாலா ஆகியோர் கடந்த ஓராண்டாக தலைமறைவாக இருந்தனர். அவர்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில், தேனி சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் வட்டாட்சியர் கிருஷ்ண குமார் இன்று காலை நேரில் ஆஜரானார். காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை அவரிடம் விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி. போலீசார் அவரை கைது செய்தனர்.


Next Story