பெரியகுளம், ஆண்டிப்பட்டி ஒன்றியத்தில் ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்


பெரியகுளம், ஆண்டிப்பட்டி ஒன்றியத்தில் ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்
x
தினத்தந்தி 2 Oct 2023 6:45 PM GMT (Updated: 2 Oct 2023 6:45 PM GMT)

பெரியகுளம், ஆண்டிப்பட்டி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடந்தது.

தேனி

கிராம சபை கூட்டம்

காந்தி ஜெயந்தியையொட்டி நேற்று, பெரியகுளம் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடந்தது. அதன்படி, கீழவடகரை ஊராட்சி கிராமசபை கூட்டம் செல்லாக்காலனி பகுதியில் நடைபெற்றது. இதற்கு ஊராட்சி தலைவர் செல்வராணி செல்வராஜ் தலைமை தாங்கினார். துணை தலைவர் ராஜசேகர் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக உதவி இயக்குனர் (தணிக்கை) சிவகுமார் கலந்து கொண்டார். கூட்டத்தில் சுகாதாரம், அடிப்படை வசதிகள் மற்றும் சோத்துப்பாறை அணை பகுதியில் இருந்து ஊராட்சிக்கு குடிநீர் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் ஊராட்சி செயலாளர் ஜெயபாண்டியன் நன்றி கூறினார்.

எண்டப்புளி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு தலைவர் சின்னப்பாண்டியன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு, டெங்கு தடுப்பு உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. துணை தலைவர் கோகிலா, ஊராட்சி ஒன்றிய பணியாளர் ஜூலி மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலாளர் பிச்சைமணி தீர்மானங்களை வாசித்தார்.

தீர்மானம் நிறைவேற்றம்

வடபுதுப்பட்டி ஊராட்சி கிராமசபை கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் அன்னபிரகாஷ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பிரியா செந்தில் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வரவு, செலவு கணக்கு சமர்ப்பிக்கப்பட்டது. முடிவில் ஊராட்சி செயலாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.

லட்சுமிபுரம் ஊராட்சியில் தலைவர் ஜெயமணி சந்திரன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. இதற்கு துணைத் தலைவர் ராஜலட்சுமி முன்னிலை வகித்தார். டெங்கு தடுப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு, சுகாதாரத்தை பேணி காப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் ஊராட்சி செயலாளர் நந்தினி நன்றி கூறினார். சருத்துப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்திற்கு தலைவர் சாந்தி கண்ணையன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஆண்டவர் முன்னிலை வகித்தார். முடிவில் ஊராட்சி செயலாளர் லெனின் நன்றி கூறினார்.

ஆண்டிப்பட்டி ஒன்றியம்

இதேபோல், ஆண்டிப்பட்டி ஒன்றியத்தில் உள்ள 30 கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அதன்படி, பிச்சம்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு மகாராஜன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். பொதுமக்கள் தங்களது பகுதிக்கு தேவையான கோரிக்கைகளை எம்.எல்.ஏ.விடம் மனுவாக கொடுத்தனர். இதில் ஊராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி மற்றும் தி.மு.க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

திம்மரசநாயக்கனூர் ஊராட்சியில் தலைவர் அக்சயா, அனுப்பப்பட்டி ஊராட்சியில் தலைவர் சுப்புலட்சுமி தங்கையா, டி.ராஜகோபாலன்பட்டி ஊராட்சியில் தலைவர் வேல்மணி பாண்டியன் ஆகியோர் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. டி.சுப்புலாபுரம் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு தலைவர் அழகுமணி தலைமை தாங்கினார். இதில் துணைத் தலைவர் கண்ணதாசன், ஊராட்சி செயலர் பாலமுருகன் மற்றும் கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஊராட்சிகள்

சண்முகசுந்தரபுரம் ஊராட்சியில் தலைவர் ரத்தினம், திருமலாபுரம் ஊராட்சியில் தலைவர் கனிராஜா ஆகியோர் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. கன்னியப்பபிள்ளைபட்டி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு தலைவர் காளித்தாய் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலர் ஜோதிபாசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சித்தார்பட்டி ஊராட்சியில் தலைவர் சிவரெங்கு, ஜி.உசிலம்பட்டி ஊராட்சியில் தலைவர் சுமேந்திரன் ஆகியோர் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. மரிக்குண்டு ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்திற்கு தலைவர் செல்லமணி மகாலிங்கம் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலர் பிச்சைமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story