பெரியாறு பாசன கால்வாய் கட்டுமான பணிகளை தொடங்க வேண்டும்-விவசாயிகள் கோரிக்கை


பெரியாறு பாசன கால்வாய் கட்டுமான பணிகளை தொடங்க வேண்டும்-விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 6 July 2023 6:45 PM GMT (Updated: 6 July 2023 6:45 PM GMT)

சிவகங்கை மாவட்டத்தில் பெரியாறு பாசன கால்வாய் கட்டுமான பணியை விரைந்து தொடங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் பெரியாறு பாசன கால்வாய் கட்டுமான பணியை விரைந்து தொடங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாசன கால்வாய்

சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர், சிவகங்கை, திருப்புவனம் தாலுகாவில் பெரியாறு பாசன நேரடி ஆயக்கட்டில் சுமார் 143 கண்மாய்கள் உள்ளன. பெரியாறு கால்வாயில் மாவட்ட பாசன பகுதிகள் பயன்பெறும் வகையில் 1925-ம் ஆண்டு சீல்டு கால்வாய் அமைக்கப்பட்டது. இக்கால்வாய் மதுரை மாவட்டம் குறிச்சிப்பட்டி கண்மாயில் தொடங்கி, சாலூர் பூக்குழி கண்மாயில் முடிவடைகிறது. 8 கி.மீ. நீளமும், 30 அடி அகலமும் கொண்ட இக்கால்வாயில் கடந்த 2 ஆயிரமாவது ஆண்டில் ரூ.48 லட்சத்தில் குறிச்சிப்பட்டி கண்மாய் காரமடை முதல் கண்மாய் கலுங்கு வரை சுமார் ஒரு கி.மீ. தூரம் கண்மாயின் மேற்பகுதியில் பைபாஸ் கால்வாய் அமைக்கப்பட்டது.

இக்கால்வாயால் மாவட்டத்தை சேர்ந்த 1,800 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். மழை நீர் திறக்கும் நேரத்தில் அதிகப்படியான நீர் வீணாவதால் சீல்டு மண் கால்வாயை, சிமெண்டு கால்வாயாக அமைக்க வேண்டும் என தொடர்ந்து விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். பல ஆண்டுகளாக நடவடிக்கை இல்லாத நிலையில் இப்பகுதி விவசாயிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

கோர்ட்டு உத்தரவு

இவ்வழக்கில் கடந்த 2016-ம் ஆண்டு சீல்டு கால்வாயை சிமெண்டு கால்வாயாக மாற்றியமைக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கால்வாய் அமைப்பதற்கான கணக்கீட்டு பணி நடந்தது. கருத்துரு தயார் செய்து, ரூ.21.96 கோடிக்கு திட்ட மதிப்பீடும் பொதுப்பணித்துறை சார்பில் சென்னை வடிவமைப்பு கோட்டத்திற்கு அனுப்பப்பட்டது. தொடர்ந்து 2018-ம் ஆண்டு சட்டசபை கூட்டத்தொடரில் ரூ.22 கோடி இத்திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்வதாக 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் அதன்பிறகு எந்த நடவடிக்கையும் இல்லை.

இந்நிலையில் மீண்டும் கடந்த ஆண்டு சீல்டு கால்வாய் ரூ.22 கோடியில் புனரமைப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இப்பணியை விரைந்து தொடங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

விவசாயிகள் கோரிக்கை

பெரியாறு கால்வாய் பாசன விவசாயிகள் கூறியதாவது:- பெரியாறு கால்வாயில் நீர் திறந்தால் மாவட்டத்திற்கு எவ்வளவு பங்கு நீர் வழங்க வேண்டும், சிமெண்டு கால்வாய் அமைக்க வேண்டும் என 2016-ம் ஆண்டிலேயே நீதிமன்றம் உத்தரவிட்டும், தொடர்ந்து நிதி ஒதுக்கீடு செய்வதாக அறிவிக்கப்பட்டும் வேறு எந்தப்பணிகளும் தொடங்கப்படவில்லை.

ரூ.22 கோடி இத்திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படும் என கடந்த ஆண்டு ஜூன் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. விரைவாக இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து பணியை தொடங்கி முடிக்க வேண்டும். இதனால் பெரியாறு பாசன விவசாய நிலங்கள், கால்நடைகள், குடிநீர் தேவைக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.


Next Story