பெரியார் பல்கலைக்கழக முறைகேடுகள் குறித்த அறிக்கையை வழங்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்


பெரியார் பல்கலைக்கழக முறைகேடுகள் குறித்த அறிக்கையை வழங்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்
x

12-ந்தேதிக்குள் விசாரணையை நிறைவு செய்து பெரியார் பல்கலைக்கழக முறைகேடுகள் குறித்த அறிக்கையை வழங்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த ஊழல்கள், முறைகேடுகள் உள்ளிட்ட 13 குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த அமைக்கப்பட்ட குழுவின் பதவிக்காலம் மேலும் இரு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

அரசுக்கு அறைகூவல் விடும் வகையில் பெரியார் பல்கலைக்கழகத்தில் முறைகேடுகள் தொடரும் நிலையில், விசாரணை மிக மிக வேகம் குறைவாக நடைபெற்றுவருவதால், குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பிவிடுவார்களோ என்ற கேள்வி ஏற்பட்டிருக்கிறது.

பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் பற்றி விசாரணைக்கு அரசு ஆணையிட்டது மிகச்சிறந்த முன்னெடுப்பு ஆகும். அது அதன் இயல்பான முடிவை அடையவேண்டுமென்றால், விசாரணை நேர்மையாக நடைபெற வேண்டும். அதற்கு குற்றச்சாட்டுகளுக்குள்ளாகியுள்ள இப்போதைய பொறுப்பு பதிவாளர் தங்கவேல் உள்ளிட்ட அனைவரும் இடைநீக்கம் செய்யப்பட வேண்டும்.

விசாரணைக்குழு புதிய காலக்கெடு வரை காத்திருக்காமல், வருகிற 12-ந்தேதிக்குள் விசாரணையை நிறைவுசெய்து அறிக்கை வழங்குவதையும், அதன் அடிப்படையில் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதையும் தமிழக அரசு உறுதி செய்யவேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story