220 விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய அனுமதி


220 விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய அனுமதி
x

பொள்ளாச்சி பகுதியில் 220 விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாக போலீஸ் அதிகாரிகள் கூறினர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி பகுதியில் 220 விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாக போலீஸ் அதிகாரிகள் கூறினர்.

விநாயகர் சதுர்த்தி

நாடு முழுவதும் நாளை மறுநாள்(புதன்கிழமை) விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி களி மண்ணால் ஆன சிலைகளை தயாரித்து மண்பாண்ட தொழிலாளர்கள் விற்பனைக்கு வைத்து உள்ளனர். மேலும் வெளிமாவட்டங்களில் இருந்தும் சிலைகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு உள்ளன.

இதற்கிடையில் இந்து முன்னணியினர் திருப்பூரில் இருந்து சிலைகளை வாங்கி வந்து பிரதிஷ்டை செய்ய தயார் நிலையில் வைத்து உள்ளனர். கொரோனா தொற்று காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு விநாயகர் சதுர்த்தி நாளை மறுநாள் கொண்டாடப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இதற்கிடையில் சிலைகளை பிரதிஷ்டை செய்ய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-

நீர்நிலைகளில் கரைக்க...

கொரோனா காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு விநாயகர் சதுர்த்தியையொட்டி சிலைகளை பிரதிஷ்டை செய்து, ஊர்வலமாக எடுத்து செல்ல அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இன்று வரை பொள்ளாச்சி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 220 சிலைகள் பிரதிஷ்டை அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே வைக்கப்பட்ட இடங்களில் மட்டும் சிலைகளை பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் விடுத்துள்ள வேண்டுகோளின்படி ரசாயன வண்ண கலவைகள் பூசப்பட்ட சிலைகளை நீர் நிலைகளில் கரைக்க கூடாது. சிலைகளின் பாதுகாப்பிற்கு அதன் அமைப்பாளர்களே முழுபொறுப்பு ஆவார்கள்.

நடவடிக்கை

சிலைகள் வைக்கப்படும் இடத்திலும், அதை சுற்றியுள்ள இடங்களிலும் ஒளி வசதியை ஏற்படுத்தி போதுமான வெளிச்சம் இருக்க ஏற்பாடு செய்ய வேண்டும். தீ விபத்துகளை தடுக்க சிலை வைக்கப்படும் இடங்களில் வாளியில் மணல், தண்ணீர் நிரப்பி வைத்தல் போன்ற அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்ய வேண்டும். சிலை வைக்கப்படும் இடத்திற்கு அருகில் கார், இருசக்கர வாகனங்கள், சைக்கிள் போன்றவற்றை நிறுத்த கண்டிப்பாக அனுமதிக்க கூடாது. ஒவ்வொரு சிலையும் வைக்கப்படும் நாளில் இருந்து அந்தந்த சிலைக்கு 5 பேரை பாதுகாவலராக நியமிக்க வேண்டும். சிமெண்டு சீட், துத்தநாகத்தகடு போன்றவற்றால் மட்டுமே பந்தல் அமைக்க வேண்டும். விதிமுறைகளை மீறும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story