பாண்டியன் கோட்டையில் அகழாய்வு செய்ய வேண்டும்


பாண்டியன் கோட்டையில் அகழாய்வு செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 27 Nov 2022 6:45 PM GMT (Updated: 27 Nov 2022 6:45 PM GMT)

காளையார்கோவில் பாண்டியன் கோட்டையில் அகழாய்வு செய்ய வேண்டும் என்று தொழில்நடை குழுவினர் அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

சிவகங்கை

காளையார்கோவில் பாண்டியன் கோட்டையில் அகழாய்வு செய்ய வேண்டும் என்று தொழில்நடை குழுவினர் அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

பாண்டியன் கோட்டை

சிவகங்கை தொழில் நடைக்குழு நிறுவனர் காளிராசா, செயலர் நரசிம்மன் ஆகியோர் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியுள்ளதாவது:- சங்க கால இலக்கிய சிறப்பு பாடல் பெற்ற பாண்டிய நாட்டு திருத்தலங்கள் பதினான்கில் ஒன்றாகவும், இன்றும் சிறப்பு மிக்க நகரமாகவும் இயங்கி வரும் திருக்கானப்பேர் எனும் காளையார் கோவிலில் தொன்மையான மேடாக பாண்டியன் கோட்டை சங்க கால கோட்டையின் எச்சமாக காட்சி தருகிறது. வட்ட வடிவிலான கோட்டையில் ஆழமான அகழி இன்றும் காணப்படுவதோடு கோட்டையின் நடுவில் நீராவி குளமும் உள்ளது.

37 ஏக்கரில் இக்கோட்டை மேட்டுப்பகுதியாக காணப்படுவதுடன் இதன் அருகே உள்ள ஊரும் மேட்டுப்பட்டி என வழங்கப்படுகிறது. பிற்காலங்களில் இப்பகுதியில் நாணய சாலை ஒன்று இயங்கி வந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். கோட்டை அமைக்கப்பட்டுள்ள இடத்தில் காவல் தெய்வங்களை வைத்து வணங்குவது மன்னர்கள் மற்றும் மக்கள் இயல்பு. இன்றும் அதன் நீட்சியாக கிழக்கு பகுதியில் கோட்டை முனீஸ்வரர் கோவில் தெற்கு பகுதியில் வாள்மேல் நடந்த அம்மன் கோவில் வழிபாட்டில் உள்ளன.

அகழாய்வு

பாண்டியன் கோட்டையில் மிகவும் பழமையான சங்ககால செங்கல் எச்சங்கள், கீழடியில் கிடைத்தது போன்ற கையால் செய்யப்பட்ட மேற்கூரை ஓட்டு எச்சங்கள், சிறுவர்கள் விளையாடும் வட்ட சில்லுகள், சிறிய அளவிலான உருண்டைகள், பந்து போன்ற மண் உருண்டைகள் கள ஆய்வில் கிடைக்கப்பெற்றன. கருப்பு, சிவப்பு நிற பானை ஓட்டில் மோசிதபன் என்ற பெயர் பொறிக்கப்பட்ட பானை ஓடு கிடைத்திருப்பது மேலும் இப்பகுதி கீழடி போன்று பல வரலாற்றை சுமந்து இருக்கிறது என எண்ண முடிகிறது.

எனவே இவ்விடத்தில் முறையான அகழாய்வை தமிழக அரசின் தொல்லியல் துறை மூலம் மேற்கொண்டால் பாண்டியர்களின் கோட்டை கட்டுமானங்கள் கிடைக்கலாம். தமிழக தொன்மையும் வெளிப்படும் இவ்விடத்தில் அகழாய்வு பணி தொடங்க வேண்டும்.

வாடகை கட்டிடம்

சிவகங்கை அரசு அருங்காட்சியகம் 10.3.1998-ல் தொடங்கிய காலம் முதல் இன்று வரை வாடகை கட்டிடத்திலே இயங்கி வருகிறது. மேலும் கட்டிடமும் மிகுந்த சேதம் அடைந்த நிலையில் உள்ளது.

எனவே சிவகங்கை சார்ந்த தொன்மைகளை பாதுகாக்க சிவகங்கை அரசு அருங்காட்சியகத்திற்கு தனி இடம் ஒதுக்கி அதில் நிரந்தர கட்டிடம் கட்டித்தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


Next Story