கோழிப்பண்ணையாளர்களுக்கு ரூ.1,200 கோடி நஷ்டம்


கோழிப்பண்ணையாளர்களுக்கு ரூ.1,200 கோடி நஷ்டம்
x

சத்துணவு திட்டத்தில் கடந்த ஆண்டு செய்த ஒப்பந்தம் மூலம் கோழிப்பண்ணையாளர்களுக்கு ரூ.1,200 கோடி நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. எனவே நடப்பு ஆண்டில் 580 காசுகளுக்கு கீழ் கேட்கப்படும் ஒப்பந்த புள்ளிகளை நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்தி நாமக்கல் மண்டல முட்டை கோழிப்பண்ணையாளர்கள், கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

நாமக்கல்

கலெக்டர் அலுவலகத்தில் மனு

நாமக்கல் மண்டல முட்டை கோழிப்பண்ணையாளர்கள் நேற்று கலெக்டர் அலுவலகம் திரண்டு வந்து அதிகாரிகளிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

நாமக்கல் மண்டலம் தமிழ்நாடு முட்டை உற்பத்தியில் முதன்மையான பகுதியாக உள்ளது. முட்டை உற்பத்தி தொழில், நேரடியாகவும், மறைமுகமாகவும், 10 லட்சம் தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரமாக விளங்குகிறது. இருப்பினும் முட்டை உற்பத்தி செலவைவிட, குறைந்த விலையே கடந்த காலங்களில் கிடைத்ததால், இந்த தொழிலே தற்போது அழிவின் விளிம்பில் உள்ளது. அதற்கு முக்கிய காரணங்களில், ஒன்று சத்துணவு டெண்டரில் கோரப்படும் விலை.

ரூ.1,200 கோடி நஷ்டம்

சத்துணவு முட்டைக்கு உற்பத்தி செலவைவிட மிக குறைந்த விலையை குறிப்பிடும் நிறுவனங்கள் மிக, மிக குறைந்த விலையில் முட்டையை கொள்முதல் செய்கின்றன. மேலும் டெண்டர் நிறுவனங்கள் கேட்கும் விலைக்கு முட்டையை தர முடியாத நிலையில், அவை வேறு மாநில முட்டையை கொள்முதல் செய்து சத்துணவு முட்டைக்கு அனுப்புகின்றன. அதனால், நாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளோம்.

முட்டையின் உற்பத்தி குறைந்தபட்ச அடக்கவிலை 500 காசுகள் ஆகும். சத்துணவு சப்ளைக்கான போக்குவரத்து மற்றும் இதர செலவினங்களையும் சேர்த்து 80 காசு ஆகிறது. எனவே குறைந்தபட்ச ஏல புள்ளி 580 காசுக்கு மேல் இருக்க வேண்டும். இவ்வாறு இருந்தால் மட்டுமே பண்ணையாளர்களை மிகப்பெரிய நஷ்டத்தில் இருந்து காப்பாற்ற முடியும்.

கடந்த ஆண்டு சத்துணவு முட்டைக்கான ஒப்பந்தம் செய்ததில், பண்ணையில் உற்பத்தியாகும் அனைத்து முட்டைகளுக்கும் முட்டை ஒன்றுக்கு, ஒரு ரூபாய் வீதம் ஆண்டு முழுவதும், ரூ.1,200 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. இந்த நஷ்டத்தினால் ஏற்பட்ட கடனில் இருந்து மீளமுடியாமலும், பண்ணையை சரியாக நடத்த முடியாமலும் மிகவும் சிரமப்பட்டு, மன உளைச்சலுடன் பண்ணையாளர்கள் நடத்திக் கொண்டிருக்கிறோம்.

நிராகரிக்க வேண்டும்

மேலும், இந்த ஆண்டும் குறைவான ஒப்பந்த புள்ளிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டால், எங்கள் வாழ்வாதாரமும், தொழிலும் முழுவதுமாக முடங்கி விடும். அதனால் எங்கள் தொழிலை நம்பி உள்ள 10 லட்சத்திற்கும் மேற்பட்ட நேரடி மற்றும் மறைமுக தொழிலாளர்கள் குடும்பத்தின் வாழ்வாதாரமும் இழந்து விடும் அபாயம் உள்ளது.

எனவே சத்துணவு முட்டைக்கு உற்பத்தி செலவு மற்றும் போக்குவரத்து செலவு உள்பட அனைத்தையும் கணக்கிட்டு, 580 காசுக்கு கீழ் கேட்கப்படும் ஒப்பந்த புள்ளிகளை நிராகரிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.


Next Story