சென்னை சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்க் கூரை சாய்ந்தது: பங்க் ஊழியர் பலி


சென்னை சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்க் கூரை சாய்ந்தது: பங்க் ஊழியர் பலி
x

சென்னை சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்க் மேற்கூரை சாய்ந்து 13 பேர் காயம் அடைந்தனர். பங்க் ஊழியர் பலியானார்.

சென்னை,

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு 7 மணியளவில் மழை பெய்தது.

இந்த நிலையில், சென்னை சைதாப்பேட்டையில் கிழக்கு ஜோன்ஸ் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் கூரை திடீரென சரிந்து விழுந்தது. மழை காரணமாக பெட்ரோல் பங்கில் ஒதுங்கி நின்ற வாகன ஓட்டிகள், பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மற்றும் அருகில் நின்றவர்கள் என பலர் பெட்ரோல் பங்க் கூரை விழுந்த விபத்தில் சிக்கி உள்ளனர்.

ஊழியர் பலி

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக பெட்ரோல் பங்க் கூரைக்குள் சிக்கியவர்களை மீட்க முற்பட்டனர். உடனடியாக இது குறித்து தீயணைப்பு நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தீயணைப்பு படை வீரர்களும் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் 7 பேர் லேசான காயங்களுடன் தப்பினர். 7 பேர் இடிபாடுகளுக்கு நடுவில் சிக்கிக்கொண்டனர். ஜே.சி.பி. வைத்து மேற்கூரையை தூக்கி மீட்பு பணி நடந்தது.

பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்த மதுராந்தகத்தை சேர்ந்த கந்தசாமி (வயது 63) என்ற ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். மற்ற 6 பேர் மீட்கப்பட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரி மற்றும் கலைஞர் நூற்றாண்டு நினைவு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். லேசான காயம் அடைந்த 7 பேரும் அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் முதல் உதவி சிகிச்சை பெற்று வீடு திம்பினர்.

அமைச்சர் பார்வையிட்டார்

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பெருநகர சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.

மேலும் பெட்ரோல் பங்க் என்பதால் கேஸ் வெல்டிங் கருவி மூலம் மேற்கூரையை வெட்டி எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு அவர்களின் ஒப்புதலுடன் தான் மேற்கூரையை முழுமையாக அகற்றும் பணி நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர்.


Next Story