கடையநல்லூரில் புகைப்பட கண்காட்சி தொடக்கம்
![கடையநல்லூரில் புகைப்பட கண்காட்சி தொடக்கம் கடையநல்லூரில் புகைப்பட கண்காட்சி தொடக்கம்](https://media.dailythanthi.com/h-upload/2023/10/20/1577056-kdnl-exi-1.webp)
கடையநல்லூரில் மத்திய அரசு சார்பில் நேற்று புகைப்பட கண்காட்சி தொடங்கியது.
கடையநல்லூர்:
இந்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சென்னை மண்டல மத்திய மக்கள் தொடர்பகம் சார்பாக மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள், சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறை என்ற தலைப்பில் 2 நாள் புகைப்பட மற்றும் டிஜிட்டல் கண்காட்சி கடையநல்லூர் முத்துகிருஷ்ணாபுரம் சேனைத்தலைவர் சமுதாயக்கூடத்தில் நேற்று தொடங்கியது.
தனுஷ். எம்குமார் எம்.பி., கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு கண்காட்சியை திறந்து வைத்துனர். நிகழ்ச்சியை முன்னிட்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி கவுரவித்தனர்.
பத்திரிகை தகவல் அலுவலக மற்றும் மத்திய மக்கள் தொடர்பக தென்மண்டல தலைமை இயக்குனர் (பொறுப்பு) பழனிசாமி தலைமை தாங்கினார். அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சுரேஷ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முருகன், மாவட்ட சமூக நல அலுவலர் மதிவதனா, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பர்க்கத் சுல்தானா, பி.எஸ்.என்.எல். இளநிலை தொலைதொடர்பு அலுவலர் அமுதா உள்ளிட்டோர் பல்வேறு திட்டங்கள் குறித்து விளக்கினர். நகர்மன்ற துணைத் தலைவர் ராசையா, 14-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் வேல்சங்கரி ஆகிேயார் வாழ்த்தி பேசினர். கள விளம்பர அலுவலர் கோபகுமார் வரவேற்றார். கள விளம்பர உதவியாளர் வேல்முருகன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.