ராமேசுவரம் கோவிலில் குவிந்த பக்தர்கள்


ராமேசுவரம் கோவிலில் குவிந்த பக்தர்கள்
x
தினத்தந்தி 4 Jun 2023 6:45 PM GMT (Updated: 4 Jun 2023 6:45 PM GMT)

கோடைகால விடுமுறை முடிவடைய 2 நாட்களே உள்ள நிலையில் ராமேசுவரம் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

கோடைகால விடுமுறை முடிவடைய 2 நாட்களே உள்ள நிலையில் ராமேசுவரம் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.

கோடைவிடுமுறை

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கடந்த ஏப்ரல் மாதம் 28-ந் தேதி முதல் கோடைகால விடுமுறை விடப்பட்டது. கோடைகால விடுமுறை விடப்பட்டதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுலா இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாகவே இருந்து வருகின்றது. ராமேசுவரம், தனுஷ்கோடி பகுதிகளிலும் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகவே சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளும் வருகின்ற 7-ந் தேதி திறக்கப்படுகின்றது. விடுமுறை முடிவடைய இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் ராமேசுவரம் கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கோடைகால விடுமுறையின் இறுதி நாட்கள் நெருங்கி உள்ளதை தொடர்ந்து நேற்று அக்னி தீர்த்த கடலில் புனித நீராட மற்றும் கோவிலில் உள்ள தீர்த்தக் கிணறுகளில் புனித நீராடவும் ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர்.

பக்தர்கள் கூட்டம்

இதே போல் கோவிலில் சாமி தரிசனம் செய்ய முதல் பிரகாரத்தில் இருந்து மூன்றாம் பிரகாரம் வரையிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து இருந்து சாமியை தரிசனம் செய்து சென்றனர். அம்பாள் சன்னதியிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது.

மேலும் புயலால் அழிந்து போன தனுஷ்கோடி கடற்கரை மற்றும் அரிச்சல் முனை கடற்கரை சாலை பகுதியிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.


Next Story