பைன் பியூச்சர் நிதி நிறுவன மோசடி வழக்கு: 5 லட்சம் பக்க குற்றப்பத்திரிகை டிஜிட்டல் வடிவில் வழங்க போலீசார் திட்டம்


பைன் பியூச்சர் நிதி நிறுவன மோசடி வழக்கு: 5 லட்சம் பக்க குற்றப்பத்திரிகை டிஜிட்டல் வடிவில் வழங்க போலீசார் திட்டம்
x

பைன் பியூச்சர் நிதி நிறுவன ரூ.189 கோடி மோசடி குறித்த 5 லட்சம் பக்க குற்றப்பத்திரிகை ஆவணங்களை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு டிஜிட்டல் வடிவில் வழங்க அனுமதிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

கோவை,

கோவையை சேர்ந்த செந்தில்குமார் (வயது 45), விவேக் (34) ஆகியோர் கோவையில் பைன் பியூச்சர் உள்பட பல்வேறு நிதி நிறுவனங்களை தொடங்கினர். இவர்கள் கவர்ச்சிகர அறிவிப்புகளை வெளியிட்டு முதலீட்டாளர்களிடம் பணத்தை பெற்று மோசடி செய்தனர். இதுகுறித்து முதலீட்டாளர்கள் கொடுத்த புகாரின்பேரில் கோவை பொருளாதார போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில் கோவை உள்பட தமிழகம் முழுவதும் 25,389 பேரிடம் ரூ.189 கோடிக்கும் மேல் பண மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த நிதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்கள் செந்தில் குமார், விவேக் ஆகியோரை கடந்த 2013-ம் ஆண்டு கைது செய்தனர். தொடர்ந்து விவேக்கின் சகோதரர் நித்யானந்தன் கைது செய்யப்பட்டார். இந்த நிதி மோசடி சம்பந்தமாக மொத்தம் 47 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

குற்றப்பத்திரிகை

இந்த நிலையில் ரூ.189 கோடி மோசடி குறித்து கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் 5 லட்சம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகையை தயார் செய்தனர். இந்த குற்றப்பத்திரிகையை கோவை டான் பிட் கோர்ட்டில் தாக்கல் செய்தனர். இந்த நிலையில் குற்றச்சாட்டப்பட்ட 47 பேருக்கும் 5 லட்சம் பக்கம் கொண்ட ஆவணங்களை தனித்தனியாக நகல் எடுத்து வழங்க வேண்டும் என்றால் ரூ.1 கோடியே 75 லட்சம் செலவு ஆகும் என கண்டறியப்பட்டது.

இதையடுத்து குற்றப்பத்திரிகை நகல் எடுக்க ரூ.1 கோடியே 75 லட்சம் வழங்கக்கோரி அரசிடம் நிதி கேட்டு போலீசார் கடிதம் எழுதினர். ஆனால் அந்த தொகையை அரசு அனுமதிக்கவில்லை. இதையடுத்து 5 லட்சம் பக்க குற்றப்பத்திரிக்கை ஆவணங்களை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு டிஜிட்டல் வடிவில் வழங்க அனுமதிக்க வேண்டும் என்று கோவை கோர்ட்டில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முறையிட்டனர்.

ஆனால் இந்த கோரிக்கையை கோர்ட்டு ஏற்காமல் தள்ளுபடி செய்தது. கடந்த செப்டம்பர் மாதம் சென்னை ஐகோர்ட்டும் இந்த கோரிக்கையை நிராகரித்தது.

இந்த நிலையில் குற்றம்சாட்டப்பட்ட 47 பேருக்கும் 5 லட்சம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை ஆவணங்களை டிஜிட்டல் வடிவில் வழங்க அனுமதி அளிக்ககோரி சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்து உள்ளனர்.


Next Story