பைப் லைன் மூலம் குடி நீர் வழங்க வேண்டும்

கூத்தாநல்லூர் அருகே, பொதக்குடியில் பைப் லைன் மூலம் குடி நீர் வழங்க வேண்டும் என்று அரசுக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூத்தாநல்லூர்;
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள பொதக்குடி ஊராட்சியில் உள்ள 12 வார்டுகளிலும் ஜல் ஜீவன் திட்டம் மூலம், 2020-ம் ஆண்டு வீடுகளுக்கு குடிநீர் வழங்க பைப் லைன் போடப்பட்டது. இதில், பொதக்குடி ஊராட்சியில் உள்ள வார்டுகளில், 11 வார்டுகளில் குடிநீர் குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், 3-வது வார்டில் மட்டும் 2 ஆண்டுகள் ஆகியும் இதுவரை குடிநீர் குழாய்கள் முறையாக அமைக்கப்படாமல் குடிநீர் விநியோகம் வழங்கப்படாமல் உள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் "பொதக்குடி ஊராட்சியில் உள்ள 3 வது வார்டில் 100- க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கடந்த 2020-ம் ஆண்டு ஜல் ஜீவன் திட்டம் மூலம் பொதக்குடியில் உள்ள 12 வார்டுகளுக்கும் குடிநீர் இணைப்பு பைப் லைன் பொருத்தப்பட்டு, 11 வார்டுகளிலும் குடிநீர் 2 வருடங்களாக குழாய் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், 3- வது வார்டில் உள்ள கீழமணவாளி, அக்பர் தெரு, சத்தார் தெரு, கரிமியா லைன், மதினா தெரு ஆகிய தெருக்களில் மட்டும் கடந்த 2 ஆண்டுகளாக குடிநீர் குழாய்கள் அமைக்கப்படாமல் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் வெயில் காலத்தில் குடிநீர் கிடைக்காமல் மக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாய்கள் அமைத்து குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.